Unlock 2.0: 6வது ஊரடங்கு காலத்தில் என்ன தளர்வுகள்? பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா? வெளியான தகவல்
டெல்லி: அன்லாக் 2.0 வழிகாட்டு நெறிமுறைகள் (Unlock 2.0 guidelines) என்ற பெயரில், ஊரடங்கு உத்தரவு தளர்வுகள், ஜூன் மாதம் 30ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை அன்லாக் 1.0 என்ற பெயரில் 5வது கட்ட ஊரடங்கு காலத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
பல மாநிலங்களிலும், வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. ஷாப்பிங் மால்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. உள்நாட்டு விமான போக்குவரத்தும் துவங்கியுள்ளது.
மதுரையில் ஊரடங்கு: மக்கள் அலைமோதுகிறார்கள் - கொரோனாவை கட்டுப்படுத்துவது சவால்தான்
ஊரடங்கு தளர்வுகள்
இந்த நிலையில் ஜூலை மாதம் 1ம் தேதி முதல், 6வது ஊரடங்கு காலகட்டம் ஆரம்பிக்க உள்ளது. அப்போது அன்லாக் 2.0 என்ற பெயரில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில் எந்த மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்படும் என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச விமான சேவை
இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே சர்வதேச விமான சேவை துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லி-நியூயார்க், மும்பை-நியூயார்க் வழித்தடங்கள் இந்த காலகட்டத்தில் விமான சேவைக்கு திறந்துவிடப்படும். வளைகுடா நாடுகளுக்கு தனியார் விமான சேவை நிறுவனங்களும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்வி நிறுவனங்கள்
அதேநேரம், கல்வி நிறுவனங்களை தொடங்குவது, மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது உள்ளிட்டவை பற்றி மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றும், ஏனெனில் இந்த விஷயத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி போன்றவைம் ஜூலை மாதம் நடைபெறவிருந்த பல தேர்வுகளை ரத்து செய்துள்ளன அல்லது ஒத்திவைத்துள்ளன. எனவே, கல்வி நிறுவனங்கள் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடங்கும் அளவுக்கு, நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதையே இவை காட்டுகின்றன. மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகு, ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து பள்ளிகளை தொடங்கலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருந்தார்.
உள்ளூர் ஊரடங்கு
இந்த ஊரடங்கு காலத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் ஊரடங்குகளை தமிழக அரசு அறிவித்துள்ளதை போலவே, அனைத்து மாநிலங்களும், உள்ளூர் ஊரடங்கு, மண்டல அளவிலான ஊரடங்குகளை பிறப்பித்துக்கொள்ளலாம். ஆனால், மொத்தமாக ஊரடங்கு இருக்காது.
மோடி ஆலோசனை
கடந்த 18ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அன்லாக் 2 பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் லாக்டோன் நீட்டிக்கப்படும் என்பதுபோல வெளியாகக் கூடிய வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் செயல்படவேண்டும். ஏனெனில் லாக் டவுன் கெடுபிடிகளை தளர்த்துவதுதான் அரசின் பணியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற தளர்வுகள் அதிகரிப்பது முக்கியம் என்று அந்த கூட்டத்தில் பிரதமர் கூறியுள்ளார்.
சில தளர்வுகள்
தமிழகத்தில் இன்னமும் வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல, பல மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. சர்வதேச விமான சேவை துவங்கவில்லை. இது போல மிக சில தளர்வுகள் மட்டும்தான் இன்னும் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அதில் விமான சேவை விஷயத்தில் தளர்வு அறிவிப்பதுதான், 6வது ஊரடங்கு காலத்தின் முக்கியமான அறிவிப்பாக இருக்கும் என்கிறது டெல்லி வட்டாரம்.