காய்கறி வாங்க 30 ரூபாய் கேட்ட மனைவி அதிர்ச்சி.. தலாக் சொல்லி விவாகரத்து கொடுத்த கணவர்
டெல்லி: தலைநகர் டெல்லியை ஒட்டிய புறநகர் பகுதியான கிரேட்டர் நொய்டாவில் 30 வயது பெண் தனது கணவரிடம் காய்கறி வாங்க 30 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் திடீரென அவர் முன்பு மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு, முகத்தில் காரி துப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி என்ற பகுதியை சேர்ந்தவர் சபீர் (35). இவரது மனைவி ஸைனப்(30). இந்நிலையில் தனது கணவர் சரீப்பிடம் ஸைனப் காய்கறி வாங்குவதற்காக 30 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சபீர் மனைவிக்கு தலாக் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது மனைவி ஸைனப் போலீஸ் ஸ்டேசனில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் ஸைனப்பின் தந்தை கூறுகையில், என் மகள் சரீப்பை திருமணம் செய்த காலம் முதலே அவருக்கு திருமண வாழ்க்கை இனிமையாக இல்லாமல் கசப்பாகவே இருந்து. சபீர் என் மகளை ஏற்கனவே கட்டையால் கடுமையாக தாக்கி உள்ளார். எனது மகளிடம் சபீரின் சகோதரனும் தவறாக நடந்து கொள்ளவும் முயற்சித்துள்ளார்" என்றார்.
எலெக்டரிக் ஷாக் கொடுத்து
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் ஸைனப் கூறுகையில், " கடந்த சனிக்கிழமை மாலை என் கணவர் சபீர், கணவரின் சகோதர்கள் ஸகிர், இட்ரிஷ் மற்றும் கணவரின் சகோதரி சமா, என் மாமியார் நஜ்ஜோ ஆகியோர் சேர்ந்து என்னைக் கடுமையாகத் அடித்தார்கள்,. எனக்கு எலெக்ட்ரிக் ஷாக்கும் கொடுத்தார்கள். பின்பு என் கணவர் தலாக் சொல்லி, முகத்தில் துப்பி, என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்" என்று கூறினார்.
படுகாயம் அடைந்த பெண்
இந்த தாக்குதல் நடந்த பின்னர் உதவிக்காக ஸைனப்பின் சகோதரர் ரஷீத் அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது தனது சகோதரி கணவர் மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.
காவல்நிலையத்தில் புகார்
இது தொடர்பாக ரஷீத் கூறுகையில், "ஸைனபின், கணவர் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நாங்கள் வசித்து வருகிறோம். தன்னை உறவினர்கள் தாக்கிய போது உதவிக்காக ஸைனப் எங்களை அழைத்தாள். நாங்கள், அவளின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, மொத்த குடும்பமும் என் சகோதரியைத் தாக்கியது தெரிந்தது. இது தொடர்காக நாங்கள் அவளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கிருந்து நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று, ஸைனப்பை தாக்கியவர்கள் மீது புகார் கொடுத்தோம்" என்றார்.
கணவர் மீது வழக்கு
இதையடுத்து ஸைனப்பை தாக்கியதாக, அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது தட்ரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தட்ரி காவல் நிலைய போலீசார் கூறுகையில், பெண்ணின் புகாரை ஏற்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாங்கள் சபீரைக் கைதுசெய்தாம். ஆனால் ஒரே நாளில் ஜாமின் பெற்றுவிட்டார். சபீரைத் தவிர மற்ற குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். இப்போது ஸைனப் மற்றும் அவரது குழந்தைகள் அவரது பெற்றோரின் வீட்டில் வசிக்கிறார்கள் என்றனர்.