UPI Down: திடீரென முடங்கிய யுபிஐ.. Gpay, Phonepeயால் டீக்கடைகளில் சிக்கிய கஸ்டமர்கள்! என்னாச்சுங்க?
டெல்லி: இந்தியா முழுவதும் திடீரென யுபிஐ சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். யுபிஐ சர்வர் செயலிழந்ததால் ஜிபே,போன் பே போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியவில்லை என்றும், உணவகங்கள், டீ கடைகளில் பில் கூட செலுத்த முடியாமல் தவித்து வருவதாகவும், சிலர் தங்கள் பேலன்ஸை கூட சரி பார்க்க முடியவில்லை என புகார் அளித்துள்ளனர். நெட்வொர்க் செயலிழப்பை புகார் அளிக்கும் டவுன் டிடக்டரில் மாலை .6.30 மணியிலிருந்து யுபிஐ செயல்படவில்லை என ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்து உள்ளனர்.
யுபிஐ சேவையை பயன்படுத்தாதவர்களை இப்போது விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா ரொக்கமாக கொண்டு செல்லாமல், பெட்டி கடை முதல் வணிக வளாகம் முதல் நினைத்ததை தற்போது யுபிஐ செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட இந்த யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் எளிதாக இருப்பதால், பொதுமக்களும் அதிக அளவில் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். யுபிஐ சேவைகளுக்காக போன் பே, ஜிபே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட பல்வேறு மொபைல் அப்ளிகேஷன்கள் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கி மூலமே யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டை கூட தற்போது போன் பே உள்ளிட்ட அப்ளிகேஷன்களில் இணைத்து சிறுக சிறுக செலவழித்துக் கொள்ளலாம்.
போன் பே உள்ளிட்டவை வந்த பிறகு பலர் கைகளில் பணமே வைத்துக் கொள்வதில்லை. எதற்கெடுத்தாலும் யுபிஐ ஸ்கேனர் இருக்கிறதா என்று பெட்டி கடைகளில் கூட கேட்டு வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் யுபிஐ நம்மை மாட்டி விடுவதும் உண்டு. அப்படித் தான் இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போன் பே, ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் வேலை செய்யவில்லை என புகார் அளித்துள்ளனர் பயனர்கள்.

மாலை 6.40 மணியிலிருந்து போன் பே, ஜி பே போன்ற செயலிகள் செயல்படவில்லை என ஆன்லைன் சேவைகளை புகார் அளிக்கும் டவுன் டிடெக்டரில் ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்திருக்கின்றனர். 6.56 மணிக்கு 32 பேரும், 7.10க்கு 1137 பேரும், 7.41க்கு 2974 பேரும், 7.56 க்கு 2085 பேரும் அதிகபட்சமாக 7.41 மணிக்கு 3974 பேரும் புகார் அளித்திருக்கின்றனர்.

தங்கள் காண்டாக்ட்களில் உள்ள யுபிஐ ஐடி யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியவில்லை, கடைகளில் ஸ்கேன் செய்து பணம் அனுப்ப முடியவில்லை, பேலன்ஸ் சரி பார்க்க முடியவில்லை எனவும், பேலன்ஸ் செக் செய்ய முயன்றால் "UNABLE TO LOAD ACCOUNT" என மெசேஜ் வருவதாக பலர் டவுன் டிடெக்டரில் புகார் அளித்துள்ளனர். மேலும், யுபிஐ பேமெண்ட் தொடர்பாக 82% பயனர்களும், ஃபண்ட் ட்ரான்ஸ்பர் தொடர்பாக 13 சதவீதமும், அப்ளிகேஷனில் பிரச்சனை என 5% பேரும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் வங்கிகள் தரப்பில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், தற்போது யுபிஐ சிறப்பாகவே செயல்படுகிறது என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications