கொரோனா காலத்திலும் 55 ஆயிரம் மாணவர்களுக்கு விசா.. அமெரிக்காவுக்கு பறக்கும் இந்திய மாணவர்கள்
டெல்லி: கொரோனா பாதிப்பு மோசமாக உள்ள நிலையிலும்கூட, சுமார் 55 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா அளித்துள்ளது.
உலகெங்கும் உள்ள மாணவர்கள் தங்கள் கல்லூரி மேற்படிப்படிப்பை மேற்கொள்ள அமெரிக்கா செல்வது வழக்கம். இதுபோன்ற வெளிநாட்டு மாணவர்கள் மூலம் அமெரிக்காவுக்குக் கணிசமான வருவாயும் கிடைத்து வருகிறது.
குறிப்பாக கொரோனாவுக்கு முன்பு வரை, ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அமெரிக்கா விசா
கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்பதால் இந்த ஆண்டும் குறைவான அளவிலேயே வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் மிக அதிகப்படியான இந்திய மாணவர்களின் விசாக்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தினசரி பல நூறு மாணவர்களின் விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா கருத்து
இது குறித்து டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பாளர் தூதுவர் அதுல் கேஷப் கூறுகையில், "அமெரிக்காவில் படிப்பது இந்திய மாணவர்களுக்கு வாழ்க்கையையே மாற்றும் ஒரு தனித்துவமான அனுபவமாகும், இது மாணவர்களுக்குச் சர்வதேச புரிதல்களையும் எண்ணற்ற சிறந்த வேலைவாய்ப்புகளையும் அளிக்கின்றன. இந்திய மாணவர்கள் மூலம் அமெரிக்கச் சமூகமும் பயனடைகிறது. இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்பை எளிமையாக்கித் தருவதில் அமெரிக்கத் தூதரகம் பெருமை கொள்கிறது" என்றார்.

கொரோனாவால் தாமதம்
பொதுவாக மே மாதத்தில் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் மாணவர்களை நேர்காணல் செய்யத் தொடங்கும். ஆனால் கொரோனா 2ஆம் அலை காரணமாக இந்த விசா நடைமுறைகள் தாமதப்படுத்தப்பட்டன. ஜூலை மாதத்தில், நிலைமை மேம்பட்ட பிறகு, இந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. அமெரிக்காவில் உள்ள 4,500க்கும் அதிகமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க ஆண்டுதோறும் பல ஆயிரக் கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

அமெரிக்காவில் கொரோனா
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால், அமெரிக்காவில் இருந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், அமெரிக்காவில் கொரோனா வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், அமெரிக்கக் கல்லூரிகள் திறக்கப்பட்டு, வழக்கமான கிளாஸ்கள் தொடங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications