அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்கள் நாடு திரும்பினர்!
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதற்காக நாடு கடத்தப்பட்ட 205 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். அமெரிக்கா விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் நாடு கடத்தப்பட்ட 205 இந்தியர்களும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அங்கிருந்து 205 பேரும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். இதனையடுத்து டிரம்ப் பல்வேறு அதிரடி மற்றும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகளில் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 205 இந்தியர்களை டிரம்ப் அரசு நாடு கடத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் குடிவரவுத்துறைதான் இத்தகைய நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும். ஆனால் டிரம்ப்பின் தற்போதைய ஆட்சியில் நாடு கடத்தல் நடவடிக்கையை அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்ட 205 இந்தியர்களும் அந்நாட்டின் விமானப் படை விமானமான C-17 மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
205 இந்தியர்களுடன் நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த C-17 போர் விமானம் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த 205 இந்தியர்களில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது சொந்த கிராமங்களுக்கு காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்; பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டபோது கை விலங்கிட்டு அமெரிக்காவின் போர் விமானத்தில் ஏற்பட்ட போட்டோக்களை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி வேதனையும் கண்டனமும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
எந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்?
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 205 இந்தியரில் 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
பஞ்சாப்- 30
ஹரியானா- 33
குஜராத்- 33
மகாராஷ்டிரா- 3
உ.பி. -3
சண்டிகர்- 3
அமெரிக்காவில் சுமார் 7,25,000 இந்தியர்கள் சட்ட விரோதமாக குடியிருப்பதாக கூறப்படுகிறது. மெக்சிகோ, எல் சல்வடோர் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications