4 வயது சிறுவன் ஏலியனா? நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக இந்தியர்கள் கொந்தளிப்பு
டெல்லி: சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக கூறி 104 இந்தியர்களை முதல் கட்டமாக பஞ்சாப்புக்கு அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. இதில் 48 பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த நாடு கடத்தலுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
நான் அதிபரானால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவேன் என்று சொல்லிதான் டிரம்ப் தேர்தலில் நின்றார். வெற்றியும் பெற்றார். இதனையடுத்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் மக்களை அவர் வெளியேற்ற தொடங்கியுள்ளார். நேற்று வரை கனடா, மெக்சிகோ பெயர் அடிபட்ட நிலையில், இன்று 104 இந்தியர்களையும் நாடு கடத்தியுள்ளார்.

டிரம்ப்பை பொறுத்தவரை, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கயிருப்பவர்கள் 'ஏலியன்கள்'. ஏலியன்களை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அனுப்புவோம் என்று முழங்கிய டிரம்ப், இப்படி வந்தவர்களால் ஏற்பட்ட மாற்றம் குறித்து பேச மறுக்கிறார். உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் இவர்கள்தான் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடுமையாக பங்காற்றியுள்ளனர். ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத அமெரிக்கா இன்று இவர்களை தூக்கி எறிந்திருக்கிறது.
குறிப்பாக இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் கைவிலங்கு போட்டு அடிமைகளை போன்று அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். மொத்தமுள்ள 104 பேர்களில் 30 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். 4 பேர் உத்தரப் பிரதேசம் மற்றும் சண்டிகரை சேர்ந்வர்களாவார்கள். 3 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். 25 பேர் பெண்கள். 12 பேர் சிறார்கள். 4 வயது சிறுவனும் டிரம்ப் அனுப்பி வைத்த 'ஏலியன்' பட்டியலில் இருக்கிறார். 4 வயது சிறுவன் ஏலியனா? அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுபவனா? என்று சோஷியல் மீடியாக்களில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மொத்தத்தில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 48 பேர் இருக்கின்றனர். பஞ்சாப்பில் தரையிறங்கிய விமானத்தில் இருந்தவர்கள் குறித்து அம்மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வந்தவர்களில் பெரும்பாலானோர் குருதாஸ்பூர், அமிர்தசரஸ், டர்ன் தரன், ஜலந்தர், நவன்ஷஹர், பாட்டியாலா, மொஹாலி மற்றும் சங்ரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவராவார்கள்" என்று கூறியுள்ளார். இவர்களில் சிலர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்திருக்கின்றனர். சிலர் விசா காலம் முடிந்த பின்னரும் அங்கேயே தங்கியிருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
இந்தியர்கள் வெளியேற்றப்படுவது குறித்து இந்தியா பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீண்டும் வருவதற்கு எல்லைகள் திறந்திருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. இப்படி சொன்னதுக்கு பதில், அமெரிக்காவுக்காக உழைத்த இந்தியர்களுக்கு அங்கேயே நிரந்தரமாக தங்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என அமைச்சகம் சொல்லியிருக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இன்று வந்த விமானம் வெறும் சாம்பிள்தான். மொத்தம் 7.25 லட்சம் இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இன்று 104 பேர் வந்திருக்கிறார்கள். அப்படியெனில் இதேபோன்று ஏறத்தாழ 7 ஆயிரம் முறை C-17 விமானம் இந்தியாவுக்கு வர வேண்டி இருக்கும்.
இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில், அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அங்கு டிரம்ப்பை சந்திக்கிறார். இந்த சந்திப்புக்கு பின்னராவது இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தடுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! அமெரிக்கா செய்வது சரியா? அல்லது தவறா?











Click it and Unblock the Notifications