அமெரிக்காவுக்கு உலை வைத்த டிரம்ப்? அணு ஆயுத கப்பல் தகவல்களை ஆஸ்திரேலிய தொழிலதிபரிடம் உளறல்! பகீர்
வாஷிங்டன்: சர்ச்சை நாயகனான அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பையே ஆபத்தில் தள்ளும் வகையில் மோசமான காரியம் ஒன்றைச் செய்துள்ளார். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் முன்னாள் அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப்.. இவர் கடந்த 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர். அதிபராக இருந்த சமயத்திலேயே இவர் மீது பல சர்ச்சைகள் இருந்தது.
குறிப்பாக, அதிபராக இருந்த சமயத்திலேயே இரண்டு முறை பதவிநீக்க விசாரணையையும் டிரம்ப் எதிர்கொண்டார். அமெரிக்க வரலாற்றில் அதிபர் ஒருவர் மீது இரண்டு முறை பதவிநீக்க விசாரணை நடைபெற்றது அதுவே முதல்முறையாகும்.

டிரம்ப்: டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறார். அவரது குடியரசு கட்சியிலும் அவருக்கு ஆதரவு அதிகமாகவே இருக்கிறார். இந்தச் சூழலில் டிரம்ப் குறித்துப் பல சர்ச்சை தகவல்களும் வெளியாகி வருகிறது. அதன்படி இப்போது வெளியாகியுள்ள தகவல் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பையே அச்சுறுத்துவதாக இருக்கிறது. அதாவது அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ரகசிய தகவல்களை டிரம்ப் தனது ஆஸ்திரேலியா தொழிலதிபருடன் பகிர்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து பதவியில் இருந்து விலகிய பிறகு இதை அவர் செய்துள்ளார். புளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-ஏ-லாகோ கிளப்பில் நடந்த கூட்டத்தில் டிரம்ப், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த இந்த தகவல்களை ஆஸ்திரேலியா தொழிலதிபருடன் பகிர்ந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொழிலதிபரும் உலகின் மிகப் பெரிய பேக்கேஜிங் நிறுவனத்தின் தலைவரான அந்தோனி பிராட் என்பவருடன் ட்ரம்ப் இந்த தகவல்களைப் பகிர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரகசியத் தகவல்கள்: அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றிய முக்கியமான விவரங்களை இந்த ஆஸ்திரேலியா தொழிலதிபர் அந்தோனி பிராட் பல வெளிநாட்டு அதிகாரிகள், அவரது ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களுடனும் பகிர்ந்து கொண்டுள்ளார். டிரம்பின் இந்த அலட்சியமான செயல்கள் அமெரிக்கக் கப்பற்படைக்கு மாபெரும் ஆபத்தை விளைவிப்பதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவியை இழந்த பிறகும் தனது சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்களை வைத்திருந்த வழக்கில் ஏற்கனவே டிரம்ப் மீது அமெரிக்காவில் விசாரணை நடந்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் டிரம்பிற்கு எதிராகச் சாட்சி அளிக்கத் தொழிலதிபர் பிராட் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2021இல் பாம் பீச் கிளப்பில் டிரம்ப்- பிராட் இடையேயான சந்திப்பு நடந்துள்ளது.
என்ன தகவல்: அப்போது பிராட், "அமெரிக்காவிடம் இருந்து ஆஸ்திரேலியா நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார். அதைக் கேட்டு அமைதியாக இருக்காமல். டிரம்ப் உடனடியாக அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த துல்லியமான டேட்டாக்களை வரி மாறாமல் சொல்லியுள்ளார். அப்போது டிரம்ப் இரு அதிமுக்கிய தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
முதலில் டிரம்ப் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அதிகபட்சம் எத்தனை அணு ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும் என்பதை விளக்கியுள்ளார். அதை விட முக்கியமாக ரஷ்யாவின் கண்களில் சிக்காமல் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களால் எந்தளவுக்கு அருகில் செல்ல முடியும் என்ற தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இது அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பையே அச்சுறுத்துவதாக இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டிரம்ப் எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.
இந்த வழக்கு தவிர டிரம்ப் மேலும் 3 வழக்குகளைச் சந்தித்துள்ளார். ஜார்ஜியாவில் தேர்தல் தோல்வியை மாற்றியது தொடர்பான வழக்கு, நியூயார்க்கில் ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கு மற்றும் இன்னொரு பெடரல் வழக்கை அவர் எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications