உக்ரைனை போல சீனாவுடனான யுத்தத்தை நோக்கி தைவானை தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா?
டெல்லி: உக்ரைன் நாட்டை நேட்டோ பக்கம் இழுப்பதாக போக்கு காட்டி ரஷ்யாவுடனான யுத்தத்துக்கு வழிவகுத்துவிட்டது அமெரிக்கா; தற்போது தைவானுக்கு ஆதரவு என்ற பெயரில் அந்நாட்டை சீனாவுடனான யுத்தத்துக்கு தள்ளிவிடுகிறது அமெரிக்கா என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Recommended Video
ஒருங்கிணைந்த சோவியத் ஒன்றியம் சிதறிய போது உக்ரைனும் தனி சுதந்திர நாடானது. உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் தனித்த சுதந்திர நாடுகளாக இருந்த போதும் அமெரிக்கா உள்ளிட்ட பிறநாடுகளின் பிடியில் சிக்கிவிடக் கூடாது என்பதில் ரஷ்யா கவனமாக இருந்தது.

ஆனால் ரஷ்யாவை சுற்றிய ஒவ்வொரு நாட்டையும் அமெரிக்கா தன்வயப்படுத்தியது; அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பை விரிவாக்கம் செய்ய ரஷ்யாவை சுற்றிய நாடுகளை அமெரிக்கா அடுத்தடுத்து பயன்படுத்தியது. அமெரிக்கா தங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்கிற மிதப்பில் அண்டை நாடுகளும் ரஷ்யாவை பகைத்துக் கொண்டன.
இத்தகைய போக்குகளுக்கு முடிவுகட்டும் வகையில் உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியான யுத்தத்தை தொடங்கியது. ரஷ்யாவின் இந்த யுத்தம் ஒரு ஆக்கிரமிப்பு போர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் நாடுபிடி வல்லாதிக்க பேராசையால் ஏற்பட்டதுதான் இந்த யுத்தம் என்பதையும் மறுப்பதற்கும் இல்லை. உக்ரைனும் கூட அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் எப்படியும் தமக்கு ஆதரவாக இருக்கும் என நம்பிக் கொண்டே இருந்தது.. ஆனால் இந்த நம்பிக்கை பொய்த்துப் போனதுதான் மிச்சம். நேட்டோ படைகள் அப்படி ஒன்றும் உக்ரைன் எதிர்பார்த்தது போல முழுவீச்சில் களத்துக்கு வராமல் போனது.
இதே போன்ற ஒரு சூழ்நிலைதான் தைவான் பிராந்தியத்திலும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் தொடங்கிய போது அடுத்த மோதல், தைவான் பகுதியில்தான் என கூறப்பட்டது. தைவான் தற்போதைய நிலையில் ஒரு தனித்த நாடு. ஆனால் சீனாவோ தமது ஒரு மாகாணம் என்கிறது. தைவானை எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்போம் என்கிறது சீனா.
தைவான் விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. கடந்த கால் நூற்றாண்டாக தைவான் விவகாரத்தில் அமெரிக்கா, சீனாவை எச்சரித்து மட்டும்தான் வந்துள்ளது. சீனாவை தொடர்ந்து ஆத்திரமூட்டுகிற நடவடிக்கைகளை அதாவது உக்ரைன் உள்ளிட்ட நாடுகளை பயன்படுத்தி ரஷ்யாவை ஆத்திரமூட்டியது போன்ற நடவடிக்கைகள் இதுநாள் வரை மேற்கொள்ளாமல் இருந்தது அமெரிக்கா.
இப்போது சீனாவை போருக்கு வலிந்து தள்ளிவிடும் போக்கை அமெரிக்கா கையிலெடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாகத்தான் அமெரிக்காவின் பிரதிநிதி நான்சியின் தைவான் பயணத்தை பார்க்கிறோம் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். தைவான் அதிபருடனான சந்திப்பு; தைவான் நாடாளுமன்றத்தில் நான்சி பெலோசியின் உரை என்பதெல்லாம் சீனாவை ஆத்திரப்படவைக்கும் நடவடிக்கைகள் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர். அமெரிக்கா இப்படி சீனாவை சீண்டிக் கொண்டிருப்பதன் மூலம் தைவான் மீது அந்நாடு வேறுவழியே இல்லாமல் தாக்குதல் நடத்தி யுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படலாம். அமெரிக்காவும் இதனைத்தான் விரும்புகிறது; அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நலனுக்காகவே இந்த யுத்த விளையாட்டும் உதவிகரமாக இருக்கும் என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications