'இதுதான் ஒரே வழி.. ' புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை.. வெளியிட்ட முதல்வர் யோகி அதிரடி பேச்சு
டெல்லி: இன்று உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
Recommended Video
இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிப்பது ஒரு முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக நாட்டின் பெரும்பாலான வட மாநிலங்களில் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஒரு மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை என்பது உலகிலுள்ள பல நாடுகளைவிட அதிகமாக உள்ளது.

புதிய மசோதா
இந்நிலையில், மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவுச் மசோதாவை அம்மாநில முதல்வர் யோகி வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது காலத்தின் கட்டாயம். 2026ஆம் ஆண்டிற்குள் குழந்தை பிறப்பை 2.1 ஆகக் குறைக்க அரசு விரும்புகிறது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் கருத்தில் கொண்டே இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது மூலம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

அரசு வேலை இல்லை
உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அங்கு அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்குள் இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்த அம்மாநில அரசு விரும்புகிறது. இந்தப் புதிய மசோதாவின் படி இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது. அதேபோல ஏற்கனவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றால் அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்காது.

சலுகைகள்
அதேபோல இரண்டு குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்குப் பல புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணிக்காலத்தில் கூடுதலாக 2 சம்பள உயர்வு வழங்கப்படும். பேறு கால விடுமுறை முழு சம்பளத்துடன் 12 மாதத்திற்கு அளிக்கப்படும். மேலும், குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

விமர்சனம்
இருப்பினும், இந்தப் புதிய மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்தப் புதிய மசோதா ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட படுகொலை என சமாஜ்வாடி கட்சி விமர்சித்துள்ளது.











Click it and Unblock the Notifications