காங்கிரஸ் டூ திரிணாமுல் வரை.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த திமுக அலுவலக திறப்பு நிகழ்ச்சி.. படு ஜோர்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் திமுக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர்.
டெல்லியில் இரு அவைகளிலும் குறைந்தது 7 எம்பிகளை கொண்ட கட்சிகளுக்கு அலுவலகத்தை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2013ஆம் ஆண்டிலேயே திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு தான் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

திமுக அலுவலகம்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. டெல்லியில் அமைந்துள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. தரை தளத்தில் கட்சி கூட்டங்களை நடத்துவதற்காகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்திலும், 2ஆம் தளத்திலும் நவீன வசதிகளுடன் கூடிய கருத்தரங்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 3ஆவது தளத்தில் எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

அண்ணா- கருணாநிதி படங்கள்
இது மட்டுமின்றி நூலகம், செய்தியாளர்களுக்குத் தனி அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக திமுக அலுவலக வளாகத்தில் அண்ணா கருணாநிதி சிலைகளும் திறந்து வைக்கப்பட்டன. அண்ணா சிலையை திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனும், கருணாநிதி சிலையே நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு திறந்து வைத்தார்.

சோனியா காந்தி
டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து திமுக இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் திமுக அலுவலகத்தில் குத்துவிளக்கை ஏற்றினர்.

எதிர்க்கட்சி தலைவர்கள்
சோனியா காந்தி, ஃபரூக் அப்துல்லா தவிர இடதுசாரி கட்சிகளின் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மதிமுக தலைவர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

திமுக தலைவர்கள்
மூத்த தலைவர்களுக்கு முதலில் பொன்னாடை போர்த்தி மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆர்எஸ் பாரதி, ஆ.ராசா, கனிமொழி போன்ற சீனியர்களுக்கும் விழா மேடையில் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கும் பொன்னாடை அணிவித்த முதல்வர் நினைவுப் பரிசு வழங்கினார்.

முக்கியம்
மேலும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடு, ஜெய்தேவ் கல்லா, ரவீந்திர குமார், திரிணாமுல் காங்கிரஸின் ராம்கோபால் யாதவ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர அமர் பட்நாயக் (பிஜு ஜனதா தள்), சமாஜ்வாதி மற்றும் சிம்ரன் கவுர் - (சிரோன்மணி அகாலிதளம்), மஹுவா மொய்த்ரா மற்றும் அபரூப போட்டார் (திரிணாமுல் காங்கிரஸ்) உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் ஒருங்கிணைய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் தொடங்கி சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் வரை அனைத்து கட்சி பிரதிநிதிகளும் திமுக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications