தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய மனு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், நிறுவனத்தில் உள்ள ஆபத்தான பொருட்களை அப்புறப்படுத்தவும் அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் ஆலை நிறுவனம் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுகள் சுற்றுப்புற கிராமத்தில் நோய்களை பரப்புவதாக மக்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2018ம் ஆண்டு மக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி ஆலையும் மூடி சீல் வைக்கப்பட்டது.

ஆனால் இதற்கிடையில் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் தடை உத்தரவு செல்லும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடியது வேதாந்தா நிறுவனம். ஆனால் நிறுவனத்தை திறப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும், ஆலையை திறக்க இடைக்கால அனுமதிக்கூட வழங்கக்கூடாது எனவும் தமிழ்நாடு அரசும் மனு தாக்கல் செய்திருந்தது.
இதனால் 2018ம் ஆண்டு முதல் ஆலை மூடப்பட்டிருந்தது. இடையில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலை திறக்கப்பட்டு பின்னர் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு கடைசியாக கடந்த மாதம் 27ம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, "ஆலையை திறக்கும் வரை அதில் உள்ள கருவிகளை பராமரிக்க அனுமதிக்க வேண்டும். மேலும் ஆலையினுள் ஆபத்தான கருவிகள் இருக்கின்றன. இந்த கருவிகளை அப்புறப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
ஆனால் இது தொடர்பாக மாநில அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், இது குறித்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கூறியுள்ளார். இதேபோல ஸ்டெர்லைட் ஆலை மூடல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே ஆலையை திறக்க வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்டடிருந்த மனு விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை இன்று (ஏப்ரல்.10) ஒத்திவைத்தனர். இதனையடுத்து இன்று விசாரணை நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications