ஆபத்தில் டெல்லி.. உச்சத்தை தொட்ட காற்று மாசுபாடு.. வாகனங்களுக்கு தடை.. அமலாகும் கடும் கட்டுப்பாடு
டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. மோசமான நிலையை காற்று மாசுபாடு எட்டியுள்ள நிலையில் நாளை முதல் டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களும், மின்சாரம் உள்ளிட்டவற்றால் இயங்கும் லாரிகள் மட்டுமே டெல்லிக்குள் நாளை முதல் நுழையலாம். பிற வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் அதிஷி முதல்வராக உள்ளார். அதோடு டெல்லியில் தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்களின் வீடுகள் உள்ளன. இதுதவிர நம் நாட்டின் முக்கிய அலுவலகங்கள், வெளிநாடுகளின் தூதரகங்கள் டெல்லியில் அமைந்துள்ளன.

இத்தகைய சூழலில் தான் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காற்று மாசுபாடு என்பது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. அதாவது டெல்லி காற்று தர அட்டவணைப்படி இன்று இரவு 7 மணிக்கு 457 என்ற அளவில் காற்று மாசுபாடு உள்ளது. இது Severe Plus நிலையாகும். அதாவது
இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக நாளை முதல் டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் GRAP - 4 திட்டத்தின் கீழ் இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி முதல்வர் அதிஷி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி டெல்லியில் நாளை முதல் 1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்புகள் நடத்த வேண்டும். 10 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக அறிவிப்பு வெளியாகும் வரை இதனை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்'' என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி GRAP - 4ன்படி டெல்லிக்கும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். பிற வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் எல்என்ஜி, சிஎன்ஜி, பிஎஸ்-6 டீசல் அல்லது மின்சாரம் உள்ளிட்டவற்றில் இயங்கும் பிற வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.
மேலும், நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின்சார துறை சார்ந்த பணிகள், குழாய் பதிப்பு உள்ளிட்ட பணிகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசு, மாநகராட்சி, தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications