உஷார் மக்களே! நியூஸ் பேப்பரில் உணவு வாங்கி சாப்பிடுபவரா நீங்கள்? எப்எஸ்எஸ்ஏஐ எச்சரிக்கை- ஷாக் தகவல்
டெல்லி: உணவு பொருட்கள் விற்பனை செய்வோர் செய்தித்தாள்களில் அதனை வைத்து வழங்கக்கூடாது என மீண்டும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது. அதோடு, செய்தித்தாள்களை பயன்படுத்தி வழங்கும் உணவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பொதுவாக நாம் மளிகை கடை, டீக்கடைகள், தெருவோர கடைகளுக்கு செல்லும்போது உணவு பொருட்களை செய்தித்தாள்களில் வைத்து நமக்கு தருவார்கள். இதனால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் தான் எப்எஸ்எஸ்ஏஐ எனும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வழங்க கூடாது என தெரிவித்துள்ளது. ஆனாலும் கூட இதனை பலர் பின்பற்றுவது இல்லை. வியாபாரிகள் இப்படி அலட்சியமாக இரு்தாலும் கூட மக்களாகிய நாமும் அதனை பெரியதாக எடுத்து கொள்வது இல்லை.
இந்நிலையில் தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வழங்குவது குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணையத்தின் சிஇஓவான கமலா வர்தன ராவ் கூறியதாவது:
உணவு பொருட்களில் பொது சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதன் ஒருபகுதியாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செய்தித்தாள்களில் உணவு பொருட்களை பார்சலாகவும், சாப்பிடவும் கொடுப்பதை தடுக்க வேண்டும். ஏனென்றால் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வழங்குவது என்பது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மை உணவு பொருட்களில் கலப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்த மையில் ரசாயனங்கள் உள்ளன. இது உணவை மாசுப்படுத்தும். இந்த மாசுபட்ட உணவை நாம் சாப்பிடும்போது உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். மேலும் செய்தித்தாள்கள் என்பது பல கட்டங்களை தாண்டி வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் அந்த செய்தித்தாள்களில் பாக்டீரியா, வைரஸ்கள் உள்பட பல நோய் கிருமிகள் இருக்கலாம். இந்நிலையில் நாம் செய்தித்தாள்களில் உணவு வைத்து உண்ணும்போது நமக்கு நோய்கள் ஏற்படாமல். இதனால் வியாபாரிகள் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் உணவு பொருட்கள் பேக்கிங் முறைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உணவு பொருட்களில் செய்தித்தாள்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறியுள்ளார். அதோடு பொதுமக்களும் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications