எம்பி டூ குடியரசுத் தலைவர்.. அனைத்து உச்சங்களையும் கண்ட பிரணாப் முகர்ஜி
டெல்லி: பாரத ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடு கண்ட முக்கியத் தலைவர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர்.
வெளியுறவுத்துறை அமைச்சர், நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், லோக்சபா முன்னவர், முன்னாள் குடியரசுத் தலைவர் என்று பல்வேறு உச்சங்களைக் கண்டவர் பிரணாப் முகர்ஜி. அடிப்படையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான பிரணாப் முகர்ஜி மன்மோகன் சிங் அரசில் நிதியமைச்சராக செயல்பட்டார். பின்னர் அதே மன்மோகன் சிங் அரசின் பதவிக்காலத்திலேயே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1935ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் பிரணாப் முகர்ஜி. அவருக்கு வயது 83. இவரது மனைவி பெயர் சுவ்ரா முகர்ஜி. இவருக்கு சர்மிஷ்டா முகர்ஜி என்ற மகளும், அபிஜித் முகர்ஜி, இந்திரஜித் முகர்ஜி என்ற இரு மகன்களும் உள்ளனர். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் பிரணாப் முகர்ஜி.
ராஜ்யபா மற்றும் லோக்சபாவில் முன்னவராக பதவி வகித்துள்ளார். இந்திரா காந்தி, பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம் வந்துள்ளார். இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு இவர் பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ராஜீவ் காந்தி பிரதரமாக வந்தார்.
திட்டக் கமிஷன் துணைத் தலைவர் பதவியையும் பிரணாப் முகர்ஜி வகித்துள்ளார்.
குடியரசுத் தலைவராக ஓய்வு பெற்ற பின்னர் சில மாதங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் நடத்திய மாநாட்டில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சிகளிலும் நல்ல அபிமானிகளையும், நண்பர்களையும் கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி, காந்தி குடும்பத்துடன் நல்லுறவில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூபன் ஹசாரிகா:
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பூபன் ஹசாரிகா, பாடகர், கவிஞர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். அஸ்ஸாம் மொழியில் அவர் எழுதி, இசையமைத்துப் பாடிய பாடல்கள் மத நல்லிணக்கம், மனிதாபிமானம், சகோதரத்துவம் என சமூகம் சார்ந்த பாடல்களாக இன்றளவும் வலம் வருகின்றன. பெங்காலி, இந்தி மொழிகளிலும் அவர் பாடியுள்ளார். அஸ்ஸாமின் கிராமப்புற இசையை தேசிய அளவில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் ஹசாரிகா.
சங்கீத் நாடக அகாடமி, பத்ஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். மறைவுக்குப் பின்னர் அவருக்கு பத்மவிபூஷண் விருது கிடைத்தது. தற்போது பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது.
நானாஜி தேஷ்முக்:
சண்டிகாதாஸ் அம்ரித் ராவ் தேஷ்முக் என்ற இயற்பெயர் கொண்ட நானாஜி தேஷ்முக், 1916ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள கடோலி என்ற ஊரில் பிறந்தவர். பிராமண வகுப்பைச் சேர்ந்த இவர் வறுமையில் வாடிய நிலையிலும் கல்வி மீது தீராக் காதல் கொண்டவர். காய்கறி விற்று படித்தார். பால கங்காதர திலகர் மீது ஈர்ப்பு கொண்டவர். சமூக சேவகராக பின்னர் அவதாரம் எடுத்தார். கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி உள்ளிட்டவற்றின் மீது அக்கறை காட்டினார். பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தில் இணைந்து செயல்பட்டார். ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications