அடுத்த அதிரடி.. விஜய் மல்லையா உட்பட 3 பேரிடம் ரூ.18,000 கோடியை மீட்ட மத்திய அரசு.. இன்னும் இருக்காமே
விஜய் மல்லையாவிடம் இருந்து 18000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாம்
டெல்லி: இந்திய வங்கிகளில் சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர்களிடமிருந்து, ரூ.18,000 கோடி மீட்கப்பட்டு வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
9,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, லண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவை கடந்த 2017ம் ஆண்டு, கர்நாடக ஹைகோர்ட், அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்திருந்தது.
அதேபோல, நீதிமன்ற உத்தரவை மீறி, சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு தன்னுடைய வாரிசுகளுக்கு விஜய் மல்லையா சொத்துகளை மாற்றியதை தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

அமலாக்கத்துறை
ஆனால், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச்சென்ற அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. எனவே, அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜாமீன்
இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தது.. இருந்தாலும், மல்லையா ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.. அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இங்கிலாந்து அரசும், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வரவும், அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து சுப்ரீம்கோர்ட்டின் உதவியை விஜய் மல்லையா நாடினார். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் நிலுவையில் உள்ளது.

வீடு, பங்களா
அதேபோல, லண்டனில் விஜய் மல்லையாவுக்கு 20 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள, அதாவது நம் இந்திய மதிப்பில் 200 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்று இருக்கிறது.. இந்த பங்களாவை சுவிட்சர்லாந்து பேங்க்கில் அடமானம் வைத்து 2012-ல் மல்லையா கடன் வாங்கியிருந்தார்.. ஆனால் அந்த கடனையும் கட்டாமல் எஸ்கேப் ஆகிவந்தநிலையில், அது தொடர்பாகவும் அவர் மீது கேஸ் உள்ளது.. எத்தனையோ முறை அவசகாசம் தந்தும் அந்த பணத்தை மல்லையா கட்டாததால், லண்டன் சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா, குடும்பத்தோடு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த பங்களாவை சட்டப்பூர்வமாக கோர்ட்டே கைப்பற்றியும் கொண்டது.

சுப்ரீம்கோர்ட்
இதைதவிர இன்னொரு கேஸும் உள்ளது.. பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.. அந்த வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.. அரசுக்கு எதிராக கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்கி உள்ளிட்ட பல சீனியர் வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.. அந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது..

3 பேர் சொத்துக்கள்
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடும்போது, விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தொடர்புடைய வங்கிக்கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் இதுவரை அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.. அதாவது, விஜய் மல்லையா உள்பட இந்த 3 பேரின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதில் இந்த தொகை கிடைத்துள்ளதாகவும், இதைதவிர, இவர்களுடைய மற்ற சொத்துக்களை பறிமுதல் செய்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

விசாரணை
இன்னும் சுமார் 50,000 கோடி வரை மீட்கப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே, விஜய் மல்லையா உள்பட 3 பேரையும் இந்தியாவுக்கு வரவழைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும், வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்றும் சொலிசிட்டர் ஜெனரல் சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications