தமிழகத்தில் விஜயின் தாக்கம் இருக்கு.. யார் ஓட்டை தவெக பிரிக்கும்? நிர்மலா சீதாராமன் சொன்ன வார்த்தை
டெல்லி: ‛‛தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல் ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும். ஆளும் கட்சியான திமுக பதற்றத்தில் உள்ளது. என்டிஏ கூட்டணி திமுகவுக்கு ஒரு கடுமையான சவாலை முன்வைக்கும். ஆனால் பெண்களின் ஓட்டுகள் தான் முக்கியம்'' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்று மொத்தம் 4 முனை போட்டி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு என்று முக்கிய பணிகளை தொடங்கி விட்டன.

இந்நிலையில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் பற்றி பேசியுள்ளார். என்டிடிவி புராபிட் கான்கிளேவ் 2026 என்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.
நிர்மலா சீதாராமன்
பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த சமயத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்தும் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளை கூறினார். இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது:
விறுவிறுப்பான போட்டி
தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல் ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும். ஆளும் கட்சியான திமுக பதற்றத்தில் உள்ளது. என்டிஏ கூட்டணி திமுகவுக்கு ஒரு கடுமையான சவாலை முன்வைக்கும். என்டிஏ உறுதியாகவும், ஒன்று பட்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் போட்டி கடினமான போட்டியாக இருக்கும்.
பதற்றத்தில் திமுக
ஆளும் திமுக இந்த முறை நம்பிக்கையுடன் இல்லை. கடந்த ஒரு வருடமாக அவர்களின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க பதற்றத்தையே காட்டுகின்றன திமுக அமைச்சர்களின் கருத்துகள், அறிக்கைகள், இலவசம் தொடர்பான பேச்சுகள், கோவில்களுக்கு செல்வது உள்ளிட்டவை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் கட்சி தேர்தலை எதிர்கொள்ள பதற்றமாக இருப்பதை அப்பட்டமாகவே காட்டுகின்றன.
விஜயின் தாக்கம் இருக்கும்
விஜய் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.அந்த தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். மேலும் அவர் யாருடைய வாக்குகளை பிரிக்கப்போகிறார் என்பது தான் கேள்வியாக உள்ளது. அவர் திமுகவின் அனைத்து ஆதரவாளர்களையும், குறிப்பாக பெண்களின் வாக்குகளை பிரிக்க போகிறாரா? என்பதை பார்க்க வேண்டும்.
பெண்களின் ஓட்டு யாருக்கு?
தமிழக அரசியலில் பெண்களுக்கு சக்திவாய்ந்த பங்கு உள்ளது. பெண்களின் வாக்குப்பதிவு சதவீதத்தை பார்த்தால் பல வாக்குச்சாவடிகளில் ஆண்களை விட அதிகமாக இருந்துள்ளது. ஆட்சிக்கு யார் வேண்டும் வரக்கூடாது என்ற முடிவெடுப்பதில் பெண்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே தமிழக தேர்தலை கவனிக்க வேண்டிய சுவாரசியமான நேரம் இதுவாகும்'' என்றார்.












Click it and Unblock the Notifications