ரெட் ஜெயண்ட்.. திறப்பு விழா நடத்துனதே விஜய் தான்! 3 தடவை தான் வெளியே வந்துருக்கார்! அண்ணாமலை அட்டாக்
டெல்லி: களத்தில் இறங்கி யார் மக்களுக்காக வேலை செய்கிறார்கள், கட்சி ஆரம்பித்து 1 வருடத்தில் மூன்று முறை மட்டுமே வெளியில் வந்தது யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும் எனவும், சினிமாவை தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு குருவி படத்தின் மூலம் திறப்பு விழா நடத்தியதே விஜய் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் இன்று கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீராமச்சந்திரா ஹாலில் நடைபெற்றது. இதில் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, விஜயின் தந்தை எஸ்ஏ.சந்திரசேகர், தாய் சோபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மற்றும் பிரச்சார பிரிவு செயலாளரான ஆதவ் அர்ஜுனா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்," டெல்லியில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசி இருக்கிறேன். தமிழக பாஜகவின் தலைவர் என்ற முறையில் என்னுடைய கருத்துக்களை கட்சியின் தலைவர்களிடம் எடுத்து வைத்திருக்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. பாஜக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து இப்போது பேசுவதற்கான தேவை இல்லை.
கூட்டணியை பொறுத்தவரை எனக்கு என்று தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது. என்னை பொறுத்தவரை கட்சி தான் முக்கியம் கட்சியை வலிமைப்படுத்த நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். தற்போது ஜனநாயக கட்சியான பாஜகவில் தேசிய தலைவர் மாநில தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடியை விஜய் விமர்சித்து பேசியிருக்கிறார்.
களத்தில் இறங்கி யார் மக்களுக்காக வேலை செய்கிறார்கள், கட்சி ஆரம்பித்து 1 வருடத்தில் மூன்று முறை மட்டுமே வெளியில் வந்தது யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். pic.twitter.com/2MUfiXyn0u
— K.Annamalai (@annamalai_k) March 28, 2025
அரசியலைப் பொருத்தவரை சக்தி வாய்ந்த வலிமை வாய்ந்த ஒருவரைப் பற்றி பேசினால் ஊடக வெளிச்சம் கிடைக்கும். அதனால் தான் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேசி உள்ளார். ராகுல் காந்தியை பற்றி பேசினால் விஜய்க்கு ஊடக வெளிச்சம் கிடைக்குமா? கிடைக்காது.. அதனால் தான் அவர் மோடியை பற்றி பேசியிருக்கிறார். கடந்த ஆண்டு கட்சி தொடங்கிய விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார். எத்தனை முறை மக்களை சந்தித்து இருக்கிறார். கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்தில் மூன்று முறை மட்டுமே வெளியில் வந்தது யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.
களத்தில் இறங்கி யார் மக்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதும் தெரியும். அடுத்தவரை கைகாட்டி பேசுவது மட்டுமே அரசியல் கிடையாது. களத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். நான் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். திமுகவுக்கு வேலை செய்த ஒருவர் அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தாவினார். தற்போது லாட்டரி மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து விஜய் கட்சிக்கு தாவி உள்ளார். அவருடைய எண்ணம் எல்லாம் தமிழக வெற்றிக்கழகத்தை லாட்டரி விற்பனை கழகம் என மாற்றுவது மட்டும் தான். ஆனால் அவர் இன்று என்னைப் பற்றி குறை சொல்லி இருக்கிறார்.
தொகுதி மறுசீரமைப்பு நடந்த போது மக்களவைத் தொகுதிகள் 1973-ல் 525இல் இருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது இருபது இடங்கள் அதிகமான போதும் தமிழகத்தில் ஒரு இடம் கூடுதலாக கிடைக்கவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் என்ன செய்து கொண்டு இருந்தது? அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கூட தமிழ்நாட்டிற்கு எதையும் கேட்டு வாங்கவில்லை. அதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக மீது தான் விஜய் குற்றம் சாட்ட வேண்டும்.
2026-ல் தமிழகத்திற்கு ஒரு தொகுதி குறைவாக கிடைத்தால் கூட பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம். விஜய் அரசியல் புரிதலோடு இது குறித்து பேச வேண்டும். திமுகவை விமர்சித்திருக்கும் விஜய் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் விஜய்க்கும் உள்ள தொடர்பு குறித்து பேச வேண்டும். தற்போது சினிமாவையும் மீடியாவையும் தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு குருவி படத்தின் மூலம் திறப்பு விழா நடத்தியது விஜய். அவருடைய பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பையும் வெளியிட்டையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் பார்த்துக் கொண்டது. திமுக பாஜகவை இணைத்து விமர்சித்துப் பேசும் விஜய் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications