காலக்கொடுமை! டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கோரதாண்டவம் ஆடிய வன்முறை கும்பலை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய இது சரியான நேரம் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் போலீஸ் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியுள்ளார்.
டெல்லி வன்முறை சம்பவங்களில் 34 பேர் பலியாகி உள்ளனர். இன்னமும் இடிபாடுகளில் இருந்தும் சாக்கடைகளில் இருந்தும் சடலங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

இப்பச்சை படுகொலைகள் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதனை நீதிபதி முரளிதர் விசாரித்தனர். தமிழரான நீதிபதி முரளிதரன், வன்முறையை தடுக்க தவறிய டெல்லி போலீசாரை கடுமையாக விளாசினார்.
மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்களின் பேச்சை நீதிமன்றத்திலேயே போட்டும் காண்பித்தார். இந்த பாஜக தலைவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யவும் நீதிபதி முரளிதர் உத்தரவிட்டார். ஆனால் திடீரென நீதிபதி முரளிதர் இடம்மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. டெல்லி போலீசார் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
இந்த விசாரணையின் போது துஷார் மேத்தா கூறுகையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இது சரியான நேரம் அல்ல. இதனால் டெல்லியில் அமைதியோ இயல்பு நிலையோ திரும்பாது. வடகிழக்கு டெல்லி வன்முறைகள் தொடர்பாக 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒருதரப்பாக சேர்க்க வேண்டும்.
டெல்லி வன்முறைகள் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள். வெளிநபர்களும் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து இவ்வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணை ஏப்ரல் 13-க்கு ஒத்திவைக்கப்பட்டது.











Click it and Unblock the Notifications