வக்பு சட்டத்திற்கு இடைக்கால தடை தொடருமா? வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
டெல்லி: வக்ஃப் சட்டத்திற்கு எதிரான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வக்ஃப் சட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது. இடைக்கால தடை தொடர்வதா என்பது குறித்த வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வக்பு சொத்துகளை நிர்வகிக்க மத்திய அரசு புதிதாக வக்பு திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தது. இருப்பினும், இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் கடந்த இரு நாட்களாக விசாரித்து வருகிறது. இதற்கிடையே 3வது நாளாக இன்றும் வழக்கு விசாரணை நடைபெற்றது.
மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுமார் 70க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். முதலில் இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது. அவர் ஓய்வு பெற்ற நிலையில், சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது.

வாதங்கள்
கடந்த மே 20ம் தேதி இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சிங்வி ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். கபில் சிபில் உச்ச நீதிமன்றத்தில், "இந்த சட்டத்தின் நோக்கமே வக்பு நிலங்களைக் கைப்பற்றுவது தான். வக்புக்கு நிலம் தர விரும்பும் ஒருவர் 5 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைக் கடைப்பிடிக்கும் நபராக இருக்க வேண்டும் என்கிறார்கள். மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவர் தான் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றியதை நிரூபிக்க வேண்டும். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்றார்.
எதிர்ப்பு
மற்றொரு வழக்கறிஞரான சிங்கிவியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேறு எந்த மதத்திலும் இதுபோல 5 ஆண்டுகள் மதத்தைப் பின்பற்றியதற்கான ஆதாரங்கள் கோரப்படவில்லை என்ற அவர், புதிய சட்டத்தின் கீழ் சிக்கல் எழுப்பப்பட்டாலே குறிப்பிட்ட இடம் வக்பு அந்தஸ்தை இழக்கும் வகையில் இருப்பதாக சிங்வி குறிப்பிட்டார். இஸ்லாமியர் அல்லாதவர்களை வக்பு போர்டில் சேர்ப்பது குறித்தும் ஆட்சேபனை எழுப்பப்பட்டது.
அரசு தரப்பு வாதம்
இதையடுத்து நேற்று 2வது நாளாக நடந்த விசாரணையில் அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, "யாருக்கும் அரசு நிலத்தில் இல்லை. அரசுக்குச் சொந்தமான ஒரு நிலம் வக்பு நிலமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தால் அதை அரசால் காப்பாற்ற முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்புகள் இருக்கிறது.
மேலும், வக்பு என்பது இஸ்லாத்தில் வெறும் தர்மம் மட்டுமே. தர்மம் என்பது எல்லா மதங்களிலும்.. கிறிஸ்தவத்திற்கும் இருக்கிறது... இந்துக்களுக்கும் தர்ம முறை இருக்கிறது. இஸ்லாத்தில் வக்பு என்பது இன்றியமையாத பகுதி இல்லை. இந்த சட்டத்தின் மூலம் வக்பு சொத்துக்கள் அபகரிக்கப்படும் என்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. நாட்டை தவறாக வழிநடத்தவே இதுபோல பொய்களைப் பரப்புகிறார்கள்" என்றார்.
ஒத்திவைப்பு
கடந்த இரண்டு நாட்களாக இரு தரப்பும் காரசார வாதங்களை முன்வைத்தனர். மனுதாரர்கள் தரப்பிலும் சரி, அரசு தரப்பிலும் சரி பல்வேறு முக்கிய விஷயங்கள் எழுப்பப்பட்டது. இந்தச் சூழலில் வழக்கு விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. இன்று இரு தரப்பினரும் வாதங்களை எடுத்து வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications