வக்பு மசோதாவை எதிர்க்கட்சிகளும் ரகசியமாக ஆதரிக்கிறது - மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ சொன்ன வார்த்தை
டெல்லி: ‛‛வக்ஃபு சட்ட திருத்த மசோதா தொடர்பாக சில மத தலைவர்கள் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த மசோதா தேவை என்று கூறுகிறார்கள். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக இப்போது மசோதாவை எதிர்க்கிறார்கள்'' என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று வக்ஃபு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா இன்று தாக்கலானது. இந்த மசோதாவை காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா என்பது வக்ஃபு வாரியத்தின் சுதந்திரத்தை பறிக்கிறது. வக்ஃபு வாரியத்துக்கான அதிகாரத்தை குறைக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பொதுவாக வக்ஃபு என்பது இஸ்லாமியர்கள் இறைபணிக்காக நன்கொடையாக வழங்கும் சொத்துகளை குறிக்கும். இந்த சொத்துகளை வக்ஃபு வாரியம் தான் நிர்வகிக்கும். மாநிலங்கள் வாரியாக வக்ஃபு வாரியங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் வக்ஃபு வாரியத்துக்கு 8,72,324 அசையா சொத்துகள்; 16,713 அசையும் சொத்துகள் உள்ளதாக கூறபப்டுகிறது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் சொத்துகள் உள்ளன.
இந்த வக்ஃபு வாரியங்கள் என்பது 1995-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வக்ஃபு வாரிய சட்டங்களின் மூலம் செயல்பட்டு வருகிறது. தற்போது அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுதான் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா 2024 ஆகும். இந்த சட்டத்திருத்த மசோதாவில் உள்ள அம்சங்கள் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளன. அதன்படி 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்ஃபு வாரியத்துக்கு சொத்துகளை வழங்க முடியும். வக்ஃபு வாரிய நிலத்தை அளவீடும் அதிகாரம் தற்போது கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வக்ஃபு கவுன்சில், மாநில வக்ஃபு வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாத 2 பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். வக்ஃபு வாரியத்தில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல அம்சங்கள் உள்ளன. இதற்கு தான் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனாலும் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய இந்த நாடாளுமன்ற கூட்டு குழுவில் எதிர்க்கட்சிகள் கோரிக்கைகள் முன்வைத்தனர். அதன்படி வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கூறினர். ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டன. சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இப்படி நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு பரிந்துரைக்கு பிறகு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்படியான சூழலில் தான் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அதன்பிறகு வக்ஃபு வாரிய திருத்த மசோதா தொடர்பான விவாதம் என்பது தொடங்கியது.
அப்போது மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ கூறுகையில், ‛‛வக்ஃபு சட்ட திருத்த மசோதா தொடர்பாக சில மத தலைவர்கள் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த மசோதா தேவை எனறு கூறுகிறார்கள். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக இப்போது மசோதாவை எதிர்க்கிறார்கள்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா என்பது வருங்காலத்துக்கு ஏற்றது போல் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பின்னோக்கிய சிந்தனை கொண்டது இல்லை. அதேபோல் இந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மூலம் முஸ்லிம்களின் எந்த சொத்தையும் யாரும் அபகரிக்கவில்லை என்பதை நான் தெளிவுப்படுத்துகிறேன். அதேபோல் இந்த சட்ட திருத்த மசோதாவால் வக்ஃபு வாரியத்தில்பதிவு செய்யப்பட்ட சொத்துகளில் ஒருபோதும் தலையிட முடியாது'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications