போச்சே.. தகுதி நீக்கத்தால் காலியான எம்பி பதவி.ராகுலின் வயநாடு தொகுதிக்கு தேர்தல் எப்போ தெரியுமா?
டெல்லி: மோடி பெயர் சர்ச்சை தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் எம்பியாக இருந்த கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல் எப்போது நடக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2019 நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய தொகுதிகளில் களமிறங்கினார்.
இதில் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். அங்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். மாறாக ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

கைக்கொடுத்த வயநாடு
கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி என்பது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். கடந்த 2009ம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. 2009 மற்றும் 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஐ ஷாநவாஸ் வெற்றி பெற்ற நிலையில் கடந்த 2019 தேர்தலில் ராகுல் காந்தி களமிறங்கி வாகை சூடினார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தி 7 லட்சத்து 6 ஆயிரத்து 367 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். 4 லட்சத்து 31 ஆயிரத்து 770 ஓட்டுகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிபி சுனீரை வீழ்த்தினார். காந்தி குடும்பத்தின் தொகுதியாக அடையாளம் காணப்பட்ட அமேதி கடந்த முறை ராகுல் காந்தியை கைவிட்ட நிலையில் வயநாடு தான் ராகுல் காந்திக்கு கைக்கொடுத்தது.

தண்டனையால் தகுதி நீக்கம்
முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் ராகுல் காந்தி மோடி என்ற பெயர் தொடர்பாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 4 ஆண்டு வரை விசாரணை நடந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் 30 நாள் ஜாமீன் வழங்கி மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி இன்று எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

காலியான வயநாடு தொகுதி
இந்த தகுதி நீக்க நடவடிக்கையாக ராகுல் காந்தி எம்பியாக இருந்த கேரளா மாநிலம் வயநாடு சட்டசபை தொகுதி காலியாகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் விரைவில் அறிவிக்கப்படும். இந்தியாவை பொறுத்தமட்டில் சட்டசபை அல்லது நாடாளுமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலுடன் வாய்ப்பு
மேலும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கு இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் விரைவில் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சமயத்தில் ராகுல் காந்தி எம்பியாக இருந்த வயநாடு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications