'வணங்காமுடி'.. டி.என். சேஷனை போல.. ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் வேண்டும்.. உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி: "யாருக்கும் அடிபணியாத, யாராலும் நெருங்க முடியாத டி.என். சேஷனை போல ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர்தான் தற்போது இந்தியாவுக்கு தேவை" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாட்டில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கவனிக்கும் போது ஒருவித அச்சம் ஏற்படுவதாக கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "டி.என். சேஷனை போல கண்டிப்பான ஒரு அதிகாரி தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் அமர்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தர நாங்கள் விரும்புகிறோம்" எனத் தெரிவித்தனர்.
1990 முதல் 1996 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்த டி.என். சேஷன் பல கண்டிப்பான தேர்தல் விதிமுறைகளை உருவாக்கியவர் ஆவார். அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய டி.என். சேஷனை உச்ச நீதிமன்றம் தற்போது நினைவுகூரியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியா..தெரியாதே..நன்றி..இளைஞரணி செயலாளர் பதவி பெரிய பொறுப்பு..உதயநிதி ஸ்டாலின் ரியாக்சன்
"தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இல்லை"..
இந்தியாவில் தற்போது தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் நடைமுறை ஒருதலைபட்சமாகவும், ஆளுங்கட்சிக்கு சார்பாகவும் இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாக செயல்படும் வகையில் அவர்களின் நியமன நடைமுறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்" எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவானது 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அண்மையில் மாற்றப்பட்டது.
"டி.என். சேஷனை போல"..
இதையடுத்து, இந்த மனுவை நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சில கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், "அரசியல் சாசனம் தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான அதிகாரங்களை கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த அதிகாரங்கள் வலிமையற்ற தோள்களை உடையவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதுதான் தற்போது பிரச்சினையாக இருக்கிறது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு ஆற்றல்மிக்க ஒரு நபரை நாம் கண்டறிய வேண்டும். அந்த நபர் யாருடைய குரலுக்கும் அடிபணியாதவராக இருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தன்னை யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு நெஞ்சுரத்தை கொண்டிருந்த டி.என். சேஷன் மாதிரியான மனிதரே, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு இப்போது தேவை.
"ஒருவர் கூட இல்லையே"..
1996-ம் ஆண்டில் டி.என். சேஷன் ஓய்வு பெற்ற பிறகு, எத்தனையோ தலைமைத் தேர்தல் ஆணையர்கள் வந்து சென்றுவிட்டனர். ஆனால், ஒருவர் கூட சேஷனை போல் வரவில்லை. டி.என். சேஷனை போன்றவர்கள் எப்போதாவது ஒரு முறை தான் தோன்றுவார்கள் போலும். இன்றைய இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவதாக மத்திய அரசு வாய்மொழியாக மட்டுமே கூறி வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை பார்த்தால் அப்படி தெரியவில்லை. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற கூறவில்லை. மாறாக, தேர்தல் ஆணையத்தை சுதந்திரமான அமைப்பாக மாற்ற ஒரு சிஸ்டத்தை கொண்டு வரவே முயற்சிக்கிறோம்" என நீதிபதிகள் கூறினர்.
அரசியல் சாசனத்தின் படியே நடக்கிறது - மத்திய அரசு
இந்நிலையில், நீதிபதிகளின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, "தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு சிறந்த நபரை நியமித்தால் அரசு ஒன்றும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், அதை எப்படி செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி. அரசியல் சானத்தில் எந்தக் குறையும் இல்லை. அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடியே, மத்திய அமைச்சரவையின் அறிவுரையின் பேரில் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அப்படி இருக்கும்போது இந்த நியமன முறையில் எப்படி குறைகாண முடியும்" என்றார்.
கொலிஜியம் போன்ற முறை..
அட்டார்னி ஜெனரலின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், "தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டுமெனில், கொலீஜியம் போன்ற அமைப்பு அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற வாதம் 1990 முதலே எழுப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தற்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பார்க்கும் போது ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிகிறது. ஆனால், இப்போது இருக்கும் தேர்தல் ஆணையர்கள் நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதை மத்தியில் ஆளும் கட்சி ஏற்காது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.
"எப்படி சுதந்திரமாக இருக்கும்?"
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி 6 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2004-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு தலைமைத் தேர்தல் ஆணையரும் தனது முழு பணிக்காலத்தை நிறைவு செய்யவில்லை. ஏனெனில், 65 வயதை தாண்டிய ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கக்கூடாது என அரசியல் சாசனம் கூறுகிறது. எனவே, அதற்கேற்ப, முழுப் பணிக்காலத்தை முடிக்க முடியாத வயதுடைய நபரை மத்திய அரசு தேர்தல் ஆணையர்களாக நியமித்து வருகிறது. இவ்வாறு இருந்தால், எப்படி தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இருக்கும்?" என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.