ராவணனை எரிக்கும் ராமலீலா நிகழ்ச்சியை நிறுத்தமாட்டோம்- நடக்கும்: டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா
டெல்லி: கொரோனா காரணமாக ராவணனை எரிக்கும் ராமலீலா நிகழ்ச்சியை நிறுத்த மாட்டோம்- நடத்தியே தீருவோம் என்று டெல்லி மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ராவணனை தீயில் எரிக்கும் ராமலீலா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ராமலீலா நிகழ்ச்சி தென்னாட்டினரை அவமதிக்கிறது என்பது திராவிடர் இயக்கத்தின் நீண்டகால எதிர்வாதம்.

இதற்காகவே தமிழகத்தில் ராவணலீலா என்ற பெயரில் ராமர் உருவபொம்மையை எரிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருக்கின்றன. அண்மையில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய போது தமிழ்ப் பேரரசன் ராவணனை போற்றுவோம் என்கிற முழக்கம் எழுந்தது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்டிங்காகின.
இந்த நிலையில் இந்த ஆண்டு டெல்லியில் ராமலீலா நடத்தப்படும் என்று பாஜகவின் மாநில தலைவர் ஆதேஷ் குப்தா அறிவித்திருக்கிறார். கொரோனா பரவலைத் தடுக்க லாக்டவுன் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் ராவணனை எரிக்கும் ராமலீலாவை நடத்துவோம் என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications