2 மாநிலத்தில் பறிபோகும் ஆட்சி! பின்னடைவுதான்! தேர்தல் முடிவு குறித்து காங். தலைவர் கார்கே ரியாக்ஷன்
டெல்லி: மூன்று மாநிலங்களிலும் எங்கள் கட்சியின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், தெலுங்கானா மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக அரையிறுதி என்று வர்ணிக்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் மிசோரம் தவிர்த்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியும் ராஜஸ்தான், சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் நடைபெற்றது. தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்றது.
3 மாநிலங்களில்: வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்களின் படி சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்தாலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வர தயராக இருந்த காங்கிரஸ் தொண்டர்களும் தோல்வியால் முகம் வாடிப்போகினர். சென்னையில் உள்ள சத்திய மூர்த்தி பவனும் வெறிச்சோடி காணப்பட்டது. மறுபக்கம் தெலுங்கானாவில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பிற மூன்று மாநிலங்களில் வெற்றியை பெற்று இருப்பது பாஜகவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
அதிருப்தி அளிக்கிறது: இதனிடையே, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதவது:- தெலுங்கானா மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மூன்று மாநிலங்களிலும் எங்கள் கட்சியின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், இந்த மூன்று மாநிலங்களிலும் மீண்டும் புத்துயிர் பெறுவோம். இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டு வருவோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையாக தயாராவோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications