இப்போதுதான் மோடி அலை அதிகம் வீசுகிறது.. எங்களுக்கே வெற்றி.. மோடியுடன் சேர்ந்து அமித் ஷா பேட்டி!
கடந்த லோக்சபா தேர்தலை விட இந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெறுவோம் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லி: கடந்த லோக்சபா தேர்தலை விட இந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெறுவோம் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். இன்று முதல்முறையாக பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். கடைசி கட்ட தேர்தல் வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது. இதையடுத்து, தற்போது ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் செய்தியாளர்களை சந்திக்கும் போதே பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசினார்.
அமித் ஷா பேட்டி
அமித் ஷா தனது பேட்டியில், மக்களவை தேர்தலுக்காக வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாஜக பிரச்சாரம் செய்தது.133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. விவசாயிகள், ஏழைகள், பெண்களுக்கு மோடி அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தலில் பாஜகவிற்கு இதுதான் முக்கியமானது.
என்ன சொன்னார்
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று நம்புகிறோம். இந்த முறை முன்பைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அரசை சுமூகமாக நடத்துவதில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம் .மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்
எங்கு வெற்றி
கடந்த தேர்தலில் வெற்றிபெறாத இடங்களை குறி வைத்துதான் தேர்தலை சந்தித்தோம். அரசின் திட்டங்கள் மூலம் 50 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். கூடுதல் பலத்துடன் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிப்போம். இந்த தேர்தலில் எங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.
வீட்டு வசதி எப்படி
வீட்டு வசதி, மின்சாரம், உணவு, எரிபொருள் அனைத்து மக்களுக்கு எளிதாக கிடைக்கிறது.நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற அலை நாடு முழுவதும் வீசுகிறது. கடந்த தேர்தலில் வெற்றிபெறாத இடங்களை குறி வைத்துதான் இந்த தேர்தலை சந்தித்தோம், என்று அமித் ஷா குறிப்பிட்டார்.