Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 எமன்கள்.. 99% மாரடைப்புக்கு "இவை" தான் காரணம்.. பகீர் கிளப்பும் ஆய்வு முடிவு.. தப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாரடைப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கிடையே கிட்டத்தட்ட 99% மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்ப் பாதிப்பு ஏற்பட 4 விஷயங்கள் மட்டுமே காரணமாக இருக்கிறதாம். இந்த 4 விஷயங்களையும் நாம் சரியாகக் கண்டறிந்து நிர்வகித்தால் மாரடைப்பு ஆபத்தைப் பெரியளவில் குறைக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் பல கோடி பேர் மாரடைப்பு, இதயச் செயலிழப்பு உள்ளிட்ட இதயப் பாதிப்புகளால் உயிரிழக்கிறார்கள். பொதுவாக மாரடைப்பு அல்லது இதயச் செயலிழப்பு ஏற்பட்டால் நமக்குச் சிகிச்சை தரக் கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கும். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்புகள் ஏற்படும்.

What are the 4 Risk Factors that are linked to almost 99 of Heart Attacks Shocking New Study

4 காரணங்கள்

இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதயப் பாதிப்புகள் சார்ந்த ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே உயிரைப் பறிக்கும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற முக்கிய இதயப் பிரச்சனைகளுக்கு நான்கு விஷயங்கள் மட்டுமே பிரதானக் காரணமாக இருப்பதாகச் சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரு நோய்ப் பாதிப்புகளும் ஏற்படக் கிட்டத்தட்ட 99% உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, அதிக ரத்தச் சர்க்கரை அளவு மற்றும் புகையிலை பயன்பாடு ஆகியவை மட்டுமே காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமானோரின் டேட்டாவை வைத்து இந்த ஆய்வு செய்துள்ளனர். இதய நோய் பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஆரம்பத்திலேயே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் முக்கியத்துவத்தை இவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

வில்லன் இதுதான்

மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதயச் செயலிழப்பு கண்டவர்களில் 93%க்கும் அதிகமானோருக்கு ஹைப்பர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாகக் கண்டறியப்பட்டது. 60 வயதுக்குட்பட்ட பெண்களில் கூட, 95%க்கும் மேல் இதயப் பிரச்சனை கொண்டவர்களுக்கு ஹைப்பர்டென்ஷன் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஃபைன்பெர்க் மருத்துவப் பள்ளி இதயவியல் பேராசிரியரும், மூத்த ஆய்வாளருமான டாக்டர் பிலிப் கிரீன்லேண்ட் கூறுகையில், "இந்த 4 காரணங்களில் எதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் இருந்தாலே கிட்டத்தட்ட 100% இதய நோய்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் அதையே தான் எடுத்துக் காட்டுகிறது.. எளிதாகச் சிகிச்சை அளிக்க முடியாத மற்ற விஷயங்களைத் தேடிச் சரி செய்வதற்குப் பதிலாக இந்த நான்கையும் கட்டுப்படுத்தினாலே இதயப் பாதிப்பைக் குறைக்கலாம்" என்றார்.

ஆய்வாளர்கள் சொல்வது என்ன

உயிருக்கு ஆபத்தான இதயப் பிரச்சனைகளைத் தடுக்க, பொதுவான இந்த நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து, நிர்வகிக்க வேண்டும் என்பதையே இந்த புதிய ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

சமீபத்தில் வெளியான சில ஆய்வுகளில் எந்தவொரு சிக்கலும் இல்லாத போதிலும் சில காலமாக இதயப் பாதிப்புகள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், கிரீன்லேண்ட் அதை ஏற்க மறுக்கிறார். நிச்சயம் உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, அதிக ரத்த சர்க்கரை அளவு மற்றும் புகையிலை பயன்பாடு ஆகியவையே இதய நோய்களுக்குக் காரணமாக இருப்பதாகவும் அதைத் தங்கள் ஆய்வுகள் உறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.

என்ன செய்ய வேண்டும்

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் உடலில் ரத்த அழுத்தம் இருந்தால் கட்டுக்குள் வைக்கவும். அதிகக் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளவும். சர்க்கரை அளவையும் பராமரிக்க வேண்டும். அத்தோடு புகையிலை பயன்பாடு இருந்தால் அதையும் முழுமையாக நிறுத்திவிட வேண்டும். இந்த 4 எளிய விஷயங்களைச் செய்தாலே மாரடைப்பு ஆபத்தையே இல்லாமல் செய்துவிடலாம்.

இது சாதாரணச் செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடல்நிலை பாதிப்புகள் எதாவது ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+