சிரித்தால் தான் புதிய நாடாளுமன்றத்தில் நுழைய முடியுமாம்.. "சிரிப்பு" ஏன் அவசியம் தெரியுமா!
டெல்லி: டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், அதில் இருக்கும் சில அதிநவீன வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது.. இருப்பினும், இடவசதி, தொழில்நுட்பம் வசதி இல்லை எனப் பல காரணங்களால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக படுவேகமாக கட்டப்பட்ட இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, மே 28ல் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இருப்பினும், இந்த புதிய கட்டிடம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
நாடாளுமன்றம்: தற்போது நடக்கும் மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடந்து வருகிறது. இதனிடையே இந்த நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் பல்வேறு சோதனைகள் இப்போது நடந்து வருகிறது. இந்த சோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு விரைவில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை நடவடிக்கைகள் தொடங்கும் எனத் தெரிகிறது. அதற்கு முன்பு, அனைத்தும் பக்காவாக இருக்க வேண்டும் என்பதால் இவை குறித்த சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய ஹைடெக் மற்றும் மேம்படுத்தப்பட்ட பேஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளனர். நாடாளுமன்ற நுழைவாயில்களில் அமைச்சர்கள் மற்றும் எம்பிகளின் முகங்கள் அடையாளம் காணப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக அதிநவீன ஸ்கேனிங் தொழில்நுட்பம் அங்குப் பொருத்தப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பம்: இதற்காக மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஸ்கேன் டேட்டா ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.. அமைச்சர்கள், எம்பிக்கள் வரும் போது 6 மீட்டருக்கு முன்னாலேயே கதவுகள் திறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல நாடுகளில் பல பயன்கள் உள்ளன. சில நாடுகளில் "smile to pay" என்று ஒன்று இருக்கிறது. அதாவது நாம் சிரிக்கும் போது பேஸியல் தொழில்நுட்பத்தில் பணத்தைச் செலுத்த முடியும். அதேபோன்ற பேசியல் தொழில்நுட்பத்தைத் தான் நாடாளுமன்றத்திற்கும் இவர்கள் கொண்டு வந்துள்ளனர்..
பேஸ் ஸ்கேன் தவிர, பாஸ்போர்ட்டிற்கு கொடுப்பது போன்ற அனைத்து பயோமெட்ரிக் விவரங்களும் எம்.பி.க்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. பேஸ் ஸ்கேனிங்கில் பிரச்சினை ஏற்பட்டு கதவு திறக்கவில்லை என்றால்.. அப்போது பயோமெட்ரிக்கை பயன்படுத்தலாம். அதிலும் சிக்கல் என்றால் தனிப்பட்ட பின் எண்ணைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும்.
ஸ்மார்ட் கார்டு: மேலும், நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட இடங்களில் நுழையக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி இருக்கும். அவர்களுக்குத் தனியாக கிரெடிட் கார்டுகளைப் போன்ற ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதை அவர்கள் SCOSTA- Smart Card Operating System for Transport Applications என்று அழைக்கிறார்கள். என்கிரிப்ட் செய்யப்பட்ட இந்த டேட்டாவை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ளது.

குறிப்பாகப் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அனுமதி உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து டேட்டாக்களும் அங்குச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்காகவே தனியாக ஒரு செயலியையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
நாடாளுமன்ற லாபி மற்றும் காரிடார்களுக்கு செய்தியாளர்கள் சென்று வரலாம்.. 10 ஆண்டுகளுக்கு மேல் மேல் ரிப்போர்ட் செய்பவர்கள் சென்டிரல் ஹாலுக்கும் செல்லலாம். இதற்காகச் செய்தியாளர்களுக்குத் தனியாக மீடியா கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் அவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வர முடியும். பொதுமக்கள் இங்குள்ள 2 கேலரிக்களை பார்த்து ரசிக்கலாம்.












Click it and Unblock the Notifications