உயிரை கொல்லும் டெங்கு! உலக ஆய்வாளர்களே திணறும்போது சைலண்டாக சாதிக்கும் இந்தியா! பாசிட்டிவ் முடிவுகள்
டெல்லி: டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நான்கு வகையான டெங்கு பாதிப்பிற்கும் ஏற்ற வேக்சின் என்பது இப்போது காலத்தின் கட்டாயமாகிறது.
டெங்கு பாதிப்பு என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் அதிகரித்தே வருகிறது. இப்போது உலக மக்கள்தொகையில் சுமார் பாதி பேர் டெங்கு ஏற்படும் ஆபத்தான சூழலில் தான் வாழ்கிறார்கள்.

கடந்த 2001ஆம் ஆண்டில் இந்த நோய் வெறும் எட்டு மாநிலங்கள் மட்டுமே ஏற்பட்ட நிலையில், இப்போது அது நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் பரவி உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நாடு முழுக்க 31,464 பேர் டெங்கு உறுதியான நிலையில், 36 டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு எப்போதும் கொசுக்களால் தான் பரவுகிறது. இது உடலில் ரத்தப்போக்கு மற்றும் ரத்த ஓட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. மரணத்திற்கும் வழிவகுக்கும் இந்த டெங்கு பாதிப்பைச் சமாளிக்க வேக்சினை கண்டறியும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இந்தியாவில் இப்போது மூன்று வேக்சின்கள் மனிதர்களிடம் சோதனை செய்யப்படுகிறது.
டெங்கு: இதில் முதல் வேக்சின் பானசா பையோடெக் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் நிறுவனம் உருவாக்கிய பலவீனப்படுத்தப்பட்ட நான்கு டெங்கு செரோடைப்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி இதுவாகும். டெங்குவில் மொத்தம் 4 வகை இருக்கும் நிலையில், அமெரிக்க ஆய்வகம் இந்த 4 டைப் வைரஸ்களின் பலவீனமான செரோடைப் பதிப்புகளை உருவாக்கியது இதை அடிப்படையாக வைத்து பானசா நிறுவனம் இந்த வேக்சினை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 100 பேரிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனையை இந்த நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் சுமார் 75% பேருக்கு 4 வகையான டெங்குவிற்கு எதிராகவும் தடுப்பாற்றல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக வரும் டிசம்பர் மாதம் நாடு முழுக்க 20 இடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 3ஆம் கட்ட சோதனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
வேக்சின்: அதேபோல சீரம் நிறுவனம் புதிய வேக்சினை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா தந்த அதே பலவீனமான வைரஸை வைத்து சீரம் நிறுவனமும் இந்த வேக்சினை உருவாக்கியுள்ளது. முதல் கட்ட வேக்சின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் இவர்கள் இரண்டாம் கட்ட சோதனையை மேற்கொள்ள உள்ளனர். அதைத் தொடர்ந்து 3ஆம் கட்ட சோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த இரண்டும் இப்போது சோதனையில் இருக்கும் நிலையில், இதுபோக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு வேக்சின்களும் சோதனையில் இருக்கிறது. நான்கு வகையான டெங்கு மாதிரிகளுக்கு எதிராகவும் செயல்படும் வகையில் அவர்கள் இந்த வேக்சின்களை உருவாக்கி வருகின்றனர்.
சாதிக்கும் இந்தியா: இதில் இருக்கும் ஆன்டிபாடி டிபன்டென்ட் இன்ஹான்ஸ்மென்ட் (ADE) தான் டெங்கு தடுப்பூசியை உருவாக்குவதில் முக்கிய சவாலாக இருக்கிறது. டெங்குவின் ஒரு வகைக்கு எதிராகக் குறைந்த ஆன்டிபாடிகளைக் கொண்ட ஒரு நபர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும் போது டெங்குவின் மற்றொரு செரோடைப் எதிராக மோசமாகப் பாதிக்கப்படலாம். இதுதான் டெங்குவிற்கான முதல் தடுப்பூசியில் பிரச்சினையாக வந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு வேக்சின் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஏடிஇ சிக்கலால் உண்மையில் வேக்சின் நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கும் கூட கடுமையான நோய் அபாயத்தை அதிகரித்தது கண்டறியப்பட்டது. இதை மனதில் வைத்துக் கொண்ட இந்திய ஆய்வாளர்கள் ஏடிஇ -ஐ ஏற்படுத்தாத பகுதிகளை வைத்து இந்த வேக்சினை உருவாக்குகிறார்கள்.
இதன் மூலம் இந்த வேக்சின் 4 வகையான சீரோடைப்பிற்கு எதிராகவும் நம்மை பாதுகாக்கும். அதேநேரம் ஏடிஇ பிரச்சினை வராமலும் இருக்கும்.
அதேபோல டிஎன்ஏ அடிப்படையிலான வேக்சின் சோதனையும் நடந்து வருகிறது. டிஎன்ஏ வேக்சின்களை பொறுத்தவரை அதைக் குறைந்த செலவில் எளிதாக உருவாக்கலாம். மேலும் ரூம் வெப்பத்திலும் கூட சேமித்து வைக்கலாம். இருப்பினும், அவை வலுவான தடுப்பாற்றலை கொடுக்காது. இதன் காரணமாகவே கொரோனா காலத்திலும் பெரும்பாலான டிஎன்ஏ வேக்சின்கள் பெரியளவில் பலன் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications