பாஜகவுக்கு தேர்தலில் மிக பெரிய பலவீனம் என்னவாக இருக்கும்? போட்டு உடைத்த பிரசாந்த் கிஷோர்! ஆஹா இதுவா
டெல்லி: லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், பாஜகவின் பலவீனம் என்றால் அது என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. விரைவில் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்கப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் பாஜகவின் பலம், பலவீனம் என அனைத்து குறித்தும் மிக விரிவாகப் பேசினார்.
பிரசாந்த் கிஷோர்: ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்பது போன்ற வாதங்கள் பாமர மக்களிடம் சென்று சேர்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "பொதுமக்கள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு கட்சிக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு கட்சிக்கும் வாக்களிப்பதை நாம் பார்க்கிறோம்.
நீங்கள் கிராமத்திற்குச் சென்று சாதாரண ஒரு நபரிடம் ஏன் இப்படி மாற்றி வாக்களித்தீர்கள் என்று கேட்டால்.. ஒரே நபரிடம் அனைத்து அதிகாரமும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே இப்படி மாற்றி வாக்களிக்கிறோம் என்பார்கள்.. இதை நம் அனைவரையும் சாதாரண மக்கள் நன்றாகப் புரிந்துகொள்கிறார்.
பதில் என்ன: அதேநேரம் இதுபோல அதிகாரம் குவிக்கப்படுவதையும் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற விஷயத்தையும் இந்தியா இதற்கு முன்பும் பார்த்துள்ளது. பாஜக அதிகாரத்தைக் குவித்து வருகிறது.. மத்திய அரசு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று பேசினால்.. அது இந்திரா காந்தியின் காலத்திலும் நடந்துள்ளதே என்பதே நமக்குக் கிடைக்கும் பதிலாக இருக்கும்" என்றார்.
பலம் என்ன: மேலும், தனக்கு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தில் பிடிப்பு இல்லை என்று கூறி அவர், இந்த நிலைப்பாட்டால் எது தவறோ அதைத் துணிச்சலாகச் சொல்ல முடிவதாகவும் ஒரு சித்தாந்தத்தில் பிடிப்பு இருந்தால் அதில் உள்ள தவறுகளையும் ஏற்க வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பாஜகவின் பலம் குறித்துப் பேசிய அவர், பாஜகவை காட்டிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டில் வலிமையான கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகவும் இது பாஜகவுக்கே உதவிகரமாக இருக்கும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பலவீனம் என்ன: அதேபோல வரும் காலங்களில் தேர்தலில் பாஜகவை பாதிக்கக்கூடிய மிக பெரிய பலவீனம் என்றால் அது என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "பிரதமர் மோடியை அதிகமாகச் சார்ந்து இருப்பதே பாஜகவின் பலவீனம். மோடிக்குப் பிறகு பாஜகவில் யார் தலைவராக வரப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு விஷயம் எனக்கு உறுதியாகவே தெரியும். அதாவது மோடிக்குப் பிறகு பாஜகவில் தலைவராக வருபவர் மோடியை விட தீவிர வலதுசாரியாகவே இருப்பார்" என்றார்.
மக்கள் தொகை கணக்கீடு: நமது நாட்டில் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கீட்டை வலியுறுத்துகிறது. இந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கீட்டை நடத்தி, அதில் வரும் நம்பர்களை வைத்தே இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து கேள்விக்கு அவர், "சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கீடு என்பதைப் பிராந்திய கட்சி முன்னெடுக்கலாம்.
அதன் மூலம் அவர்களுக்குப் பலனும் கூட கிடைக்கலாம். ஆனால், தேசிய கட்சிகள் இது குறித்துப் பேசினார் பெரியளவில் பலன் கிடைக்காது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் இந்த முழக்கத்துடன் தான் தேர்தலை எதிர்கொண்டது. இதற்குக் காங்கிரஸ் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருந்தது அனைவருக்கும் தெரியும்" என்றார்.












Click it and Unblock the Notifications