இன்று அதிமுக எடப்பாடி வசமானதற்கு.. முக்கிய ட்விஸ்ட் ஹைகோர்ட் தீர்ப்புதான்.. செப்.2 இல் நடந்தது என்ன?
அதிமுக பொதுக் குழு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதன் அடிப்படையில் தீர்ப்பளித்தனர்?
டெல்லி: அதிமுக பொதுக் குழு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எந்த கருத்தை அடிப்படையாக கொண்டு தீர்ப்பளித்தனர் என்பதை பார்ப்போம்.
அதிமுக பொதுக் குழு வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வருமா இல்லை ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வு தீர்ப்பளித்தது. அதில் அதிமுக பொதுக் குழு செல்லும் என்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என தீர்ப்பளித்தனர்.

எதன் அடிப்படையில் தீர்ப்பு
இந்த தீர்ப்பு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை பார்ப்போம். அதற்கு முன்பு அதிமுகவில் இதுவரை என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

ஜூலை 11 ஆம் தேதி
அவரது தேர்வையும் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரியும் ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது சென்னையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது.

தனி நீதிபதி தீர்ப்பு
அதிமுகவில் கடந்த ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என ஆகஸ்ட் 17ஆம் தேதி தனி நீதிபதி தீர்ப்பளித்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனுவை ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.

மேல்முறையீட்டு மனு
அதில் மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம். துரைசாாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

செப்டம்பர் 2 தீர்ப்பு என்ன
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எம். துரைசாமி , சுந்தர் மோகன் அமர்வு கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் தனி நீதிபதி ஜெயசந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பார்க்கப்பட்ட நிலையில் இரு நீதிபதிகள் அமர்வு வெளியிட்ட தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருதப்பட்டது. அப்படியென்றால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் ஓபிஎஸ் நீக்கப்பட்டதும் செல்லும் என்ற நிலை ஏற்பட்டது.

மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்றம்
இதை எதிர்த்துதான் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில் அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் என்ன சொல்லியுள்ளதோ அதை அப்படியே நாங்கள் ஏற்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டே இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். ஆக மொத்தம் உயர்நீதிமன்றமும் சரி உச்சநீதிமன்றமும் சரி அவர்கள் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளது.












Click it and Unblock the Notifications