உள்ளே அமீரக இளவரசர்.. திடீரென வேகமாக பறந்த "அந்த" கார்.. வெலவெலத்த டெல்லி போலீஸ்.. அடுத்து ட்விஸ்ட்
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், ஐக்கிய அமீரக இளவரசர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் திடீரென அடையாளம் தெரியாத கார் ஒன்று உள்ளே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜி20 அமைப்பிற்கு இந்தியா இப்போது தலைமை பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. நேற்றும் இன்றும் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

முதல் நாளான நேற்று ஆப்பிரிக்க யூனியன் ஜி20 அமைப்பில் நிரந்தரமாக இணைக்கப்பட்டது. இது ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு நிச்சயம் ஒரு பெரிய பூஸ்ட்டை தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
திடீரென உள்ளே வந்த கார்: உலக தலைவர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட டெல்லிக்கு வந்துள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதை எல்லாம் தாண்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் தங்கியிருந்த டெல்லி தாஜ் ஹோட்டலுக்குள் அனுமதி பெறாத கார் ஒன்று உள்ளே நுழைந்துள்ளது.
இது அங்கே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.. நேற்று காலை ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், அதையும் மீறி இந்த கார் உள்ளே நுழைந்துள்ளது. அப்போது பட்டத்து இளவரசரும் உள்ளே இருந்த நிலையில், இந்த காரை பார்த்ததும் டெல்லி போலீசார் அலறிப் போனார்கள்.
போலீஸ் விசாரணை:உடனடியாக அந்த காரை சுற்றி வளைத்த போலீசார், அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். டிரைவருடன் அங்கே மற்றொருவரும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த டிரைவர் கூறிய பதிலைக் கேட்டு ஆத்திரமடைந்த போலீசார், அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். அதாவது ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் அதிகாரிகள், பிரதிநிதிகளை ஓர் இடத்தில் இருந்த மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு பல்வேறு கார்களை வாடகைக்கு எடுத்திருந்தது.
அதன்படி இந்த கார் டிரைவர் அமெரிக்க அதிபர் பைடனின் கான்வாயில் செல்ல இருந்தவர். இருப்பினும், பைடன் தங்கி இருந்த ஐடிசி மவுரியா விடுதியில் இருந்து காலை 9.30 மணிக்குத் தான் புறப்பட இருந்தார். இதனால் காலையில் நேரம் இருந்ததால் அவர் மற்றொரு சவாரியை எடுத்ததாகவும் அதன் காரணமாகவே தாஜ் ஹோட்டலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: அமீரக இளவரசர் இருந்ததால் அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இவர் உரிய அனுமதி இல்லாமல் அந்த ஹோட்டலுக்கு வந்ததே இந்தக் குழப்பத்திற்குக் காரணமாக அமைந்தது. தாஜ் ஹோட்டலில் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த காரை தடுத்து நிறுத்தியபோது, கார் ஓட்டுநருடன் இருந்த நபர் தொழிலதிபர் என்பதும் தெரிய வந்தது. டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, இந்த பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றி தனக்குத் தெரியாது என்று தெரிவித்தார்.
கொஞ்ச நேரம் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அதன் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் அந்த கார் ஜோ பைடன் கான்வாயில் இருந்து நீக்கப்பட்டது.
ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொள்வதால் டெல்லியில் பல போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லி முழுவதும் போர் விமானங்கள், ட்ரோன்கள், துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications