ரகசியம் மறைத்த உதயநிதி! ராகுல் காந்தி சந்திப்பில் என்ன நடந்தது? திடீர் மீட்டிங்கின் பின்னணி விளக்கம்
டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி உடனான இன்றைய சந்திப்பில் என்ன நடந்தது? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் பற்றிய ரகசியத்தை அவர் கூற மறுத்துவிட்டார்.
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு இந்த போட்டியை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த விளையாட்டு போட்டிக்கு வரும்படி பிரதமர் மோடியை அழைக்க உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றார். இன்று மாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி அக்பர் சாலையில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். உதயநிதி ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் இந்த சந்திப்பு என்பது திட்டமிடப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் திடீரென்று உதயநிதி ஸ்டாலின் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மேலும் தேசிய அளவில் ‛இந்தியா' கூட்டணியில் இரு கட்சிகளும் உள்ளன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ள நிலையில இவர்களின் இந்த சந்திப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ‛‛சகோதரர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தேன்'' என்றார். இதையடுத்து ராகுல் காந்தி உடனான சந்திப்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
இந்த சமயத்தில் , ‛‛ராகுல் காந்தி சந்திப்பில் ஏதாவது அரசியல் பேசப்பட்டதா? ஏனென்றால் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு காங்கிரஸ் சார்பில் இன்று மீட்டிங் நடத்தப்பட்டுள்ளது'' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛ஆமாம்.. அதுபற்றி ராகுல் காந்தி பேசினார். ஆனால் இப்போது அதனை பற்றி சொல்ல முடியாது. மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாதயாத்திரை செல்வதாக தெரிவித்தார்'' என்று மட்டுமே கூறி அவர்கள் பேசிய விஷயத்தின் சாராம்சத்தின் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் மறைத்தார்.
இருப்பினும் விடாத பத்திரிகையாளர்கள், ‛‛இந்த சந்திப்பில் அரசியல் பற்றியும், வேறு எதுவும் பேசவில்லையா?'' என கேள்வி எழுப்பினர். இதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமாகவே தான் நடந்தது'' என்றார்.












Click it and Unblock the Notifications