மணிப்பூர்! துப்பாக்கி முனையில்.. நிர்வாணமாக்கி டான்ஸ் ஆட வைத்தார்கள்! கார்கில் வீரரின் மனைவி கண்ணீர்
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நாடு முழுக்க இது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்த குக்கி இன பெண்களில் ஒருவர், ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவி ஆவர். அவர் கார்கில் போரில் இந்தியாவுக்காகப் போரிட்ட வீரர் ஆவர். அவரது மனைவி தான் இப்படி கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இப்போது அவர்கள் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த மே 4ஆம் தேதி நடந்த பயங்கரத்தில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை.
துப்பாக்கி முனை: அந்த வன்முறை கும்பல் தங்கள் வீடு, சொத்து என அனைத்தையும் நாசமாக்கிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். உடைமைகள் முதல் மரியாதை வரை அனைத்தையும் இழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 42 வயதான அந்தப் பெண் மேலும் கூறுகையில், "வயலில் ஆயிரக்கணக்கான ஆண்கள் எங்களைச் சுற்றி வளைத்தனர்.
எங்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் ஆடைகளைக் களைய வைத்தார்கள். ஆடையைக் களையாவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டினர். மேலும், நிர்வாணமாக எங்களை ஆடச் சொல்லி மிரட்டினார்கள். அப்படியே ஊர்வலமாகவும் இழுத்து வந்தனர். அப்போது அங்கிருந்த அனைவரும் அவர்கள் காட்டு விலங்குகளைப் போல நடந்து கொண்டனர்" என்றார்.
கார்கில் வீரர்: அவரது கணவர் இது குறித்துக் கூறுகையில், "இந்தச் சம்பவம் நடந்தது முதல் எனது மனைவி கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார். இருப்பினும், குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக முடிந்தவரை இயல்பு நிலைக்கு வர முயல்கிறார்.. கார்கில் போர் முனையில் நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது எனது சொந்த இடம் போர்க்களத்தை விட ஆபத்தானதாகத் தெரிகிறது" என்றார்.
கடந்த மே 3 மற்றும் 4 தேதிகளில் வன்முறை கும்பல் மொத்தம் 9 நகரங்களில் இருந்த வீடுகள், தேவாலயங்களை அழித்தனர். ஒட்டுமொத்த மாநிலமும் முடங்கி மிக மோசமான நிலை ஏற்பட்டது. அப்போது முதலே அங்கே இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நிலைமை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு வரவில்லை.
என்ன நடந்தது: அந்த ராணுவ வீரர் மேலும் கூறுகையில், "கடந்த மே 4ஆம் தேதி அவர்கள் கிராமத்திற்கு வந்தார்கள்.. அவர்கள் வீடுகளை எரிக்கத் தொடங்கியதால், கிராம மக்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடினர். அப்போது எனது மனைவி என்னிடம் இருந்து பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரும் மற்ற நான்கு கிராம மக்களும் காட்டில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டனர்.
நாங்கள் வளர்க்கும் ஆடு, பன்றி, கோழி உள்ளிட்ட விலங்களை அழிக்க அந்த கும்பல் காட்டிற்குள்ளும் நுழைந்தது .. அப்போது தான் எனது மனைவி உள்ளிட்டோர் அங்கு மறைந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.. எனது மனைவியைத் தவிர, அங்கே மேலும் ஒரு பெண் மற்றும் குழந்தை மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இருந்தனர். அங்கிருந்த வயலுக்கு இவர்களை இழுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த போலீஸ் வாகனத்தைப் பார்த்துப் பாதுகாப்பிற்கு அங்கு ஓடிச் சென்றுள்ளனர். இருப்பினும், அந்த கும்பல் இரண்டு காவலர்களை அடித்து நொறுக்கி என் மனைவியையும் மற்ற நான்கு பேரையும் வெளியே இழுத்துச் சென்று இந்த கொடூரத்தை அரங்கேற்றினர்" என்றார்.












Click it and Unblock the Notifications