"சுத்த சைவம்.." நான்-வெஜ் ஸ்பூன் கூட எடுக்க மாட்டேன்.. அடுத்த சர்ச்சை வெடியை போட்ட சுதா மூர்த்தி
டெல்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி கூறும் கருத்துகள் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், சைவம்- அசைவம் குறித்து அவர் கூறிய கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். பிரிட்டன் நாட்டின் இளம் வயது பிரதமர், பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வந்த முதல் இந்து எனப் பல சிறப்புகளை வைத்திருக்கிறார்.
இவரது மனைவி தான் அக்ஷதா மூர்த்தி. இவர் வேறு யாரும் இல்லை... இன்போசிஸ் நிறுவனரில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். கல்லூரியில் படிக்கும் போது ரிஷி சுனக்கும் அக்ஷதா மூர்த்தியும் காதலிக்கத் தொடங்கினர். ரிஷி சுனக்கின் திருமணம் கூட பெங்களூரில் தான் நடந்தது.

சுதா மூர்த்தி: அக்ஷதா மூர்த்தியின் தாயார் தான் சுதா மூர்த்தி.. இவர் கூறும் கருத்துகள் கடந்த சில காலமாக இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. முன்பு ஒரு முறை தான் தனது கணவரை இன்போசிஸ் நிறுவனராக ஆக்கியதாகவும் தனது மகள் அவரது கணவர் ரிஷி சுனக்கை இளம் வயதில் பிரிட்டனின் பிரதமர் ஆக்கியதாகவும் தெரிவித்தார். இதுவே மனைவியின் மகிமை என்றும் அவர் கூறியுள்ளார்.
யூடியூப்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறிய கருத்துகள் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தான் ஒரு சுத்த சைவம் என்று குறிப்பிட்ட அவர், சைவ உணவு உண்பவர்களுக்கும் அசைவ உணவு உண்பவர்களுக்கும் ஒரே ஸ்பூன் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது என்பதே தனக்கு மிகப் பெரிய கவலை எனத் தெரிவித்துள்ளார்.

சுத்த சைவம்: வேலை என்று வரும்போது தான் பல விஷயங்களைப் புதிதாக முயன்று பார்ப்பேன் எனத் தெரிவித்த அவர், அதேநேரம் உணவில் மிகவும் கட்டுக்கோப்பாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் சுத்த சைவம்.. முட்டை, பூண்டு கூட சாப்பிட மாட்டேன்.. சாப்பிடும் போது எனக்கு ஒன்று தான் மிகப் பெரிய கவலையாக இருக்கும். வெளியே சாப்பிடும் இடத்தில் எங்குச் சைவத்திற்கும் அசைவத்திற்கும் ஒரே ஸ்பூனை பயன்படுத்திவிடுவார்களோ என்பதே எனது அச்சம்.
இதன் காரணமாகவே வெளிநாடுகளுக்குச் செல்லும் போது முடிந்தவரை நான் சைவ உணவகங்களைத் தேடிச் செல்வேன்.. மேலும், எளிதாகச் சூடாக்கிச் சாப்பிடும் உணவுகளையும் தண்ணீரையும் நான் என்னுடன் எடுத்துச் செல்வேன்" என்று அவர் கூறியிருந்தார்.
தனது இந்த சமையல் பேக்கில் சிறிய குக்கரையும் கையோடு அவர் எடுத்துச் செல்வாராம். முடிந்தவரை வெளியில் சாப்பிடக் கூடாது என்ற பாலிசியை வைத்திருக்கும் அவர், எங்குச் சென்றாலும் இந்த மினி குக்கரை எடுத்துச் சமைக்க ஆரம்பித்துவிடுவாரம். இளமைக் காலத்தில் வெளியே அதிகம் சாப்பிட வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும் ஆனால் இப்போது வெளியே சென்றாலும் கூடத் தான் சமைத்தே சாப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவாதம்: இருப்பினும், சுதா மூர்த்தியின் இந்தக் கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே அசைவ உணவுகளைக் காட்டிலும் சைவ உணவுகள் மேலானவை என்ற தவறான கருத்து இந்திய சமூகத்தில் இருக்கும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் விதமாகச் சுதா மூர்த்தியின் கருத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அப்படிப் பார்த்தால் வெளியே தங்கும் போது கழிவறை, படுக்கை என அனைத்தையும் கூட நான் வெஜ் சாப்பிடுவோர் பயன்படுத்தியிருக்கலாம். அதற்கெல்லாம் சுதா மூர்த்தி என்ன செய்வார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications