அதென்ன "ரத்த பணம்.." கேரள நர்ஸுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை.. காப்பாற்ற இருக்கும் ஒரே வழி இதுதான்
டெல்லி: ஏமனில் கொலை குற்றச்சாட்டில் கேரள நர்சுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காக்க இருக்கும் ஒரே வழி ரத்த பணம்.. இந்த ரத்த பணம் என்றால் என்ன? இதன் மூலம் அவரை எப்படிக் காக்க முடியும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் உள்ள ஏமன் நாட்டிற்கு வேலைக்காகச் சென்றவர் செவிலியர் நிமிஷா பிரியா. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஏமன் நாட்டில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். அவரது கணவரும் மகனும் அங்கே அவருடன் தான் வசித்து வந்தனர்.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததால் அவரது கணவரும் அவரது மகனும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். அவர் தனியாக இருந்த நிலையில், அவரது ஸ்பான்ஸர் தலால் அப்தோ மஹ்தி என்பவர் பிரியாவின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துள்ளார்..
பிரியா: இதனால் பிரியாவால் இந்தியா திரும்ப முடியவில்லை. பிரியாவை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாஸ்போர்ட்டை பெறப் பிரியா அவருக்கு மயங்க ஊசி போட்டுள்ளார். அப்போது மயக்க மருந்து அதிகமான நிலையில், அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரியா கடந்த 2017 முதல் அங்கே சிறையில் இருந்து வருகிறார். இந்த விவகாரத்தில் பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டையை ஏமன் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தான் உறுதி செய்தது.
இந்த நிமிஷா பிரியாவை காப்பாற்ற இப்போது ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கிறது. அதுதான் ரத்த பணம்.. அதாவது blood money. இந்த ரத்த பணத்தை உயிரிழந்த அந்த தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருக்குக் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைத்தால் மட்டுமே பிரியாவுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைக்க முடியும். தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு எப்படி நிறுத்தி வைக்க முடியும் எனக் கேட்கிறீர்களா.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதென்ன ரத்த பணம்: ஏமன் நாட்டு சட்டப்படி, கொலை செய்யப்பட்ட ஒருவரின் குடும்பத்திற்கு ரத்த பணத்தைக் கொடுத்து குற்றவாளியை விடுவிக்கலாம். நமது நாட்டின் சட்டப்படி க்ரைம் வழக்கில் புகார்தாரர் மன்னித்தாலும் மன்னிக்காவிட்டாலும் சட்டத்தின்படியே வழக்கு விசாரணை நடத்தப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும். ஆனால், ஏமன் நாட்டில் அப்படியில்லை. கொலைக் குற்றவாளியைக் கூட ரத்த பணத்தைத் தொடுத்து மீட்டெடுக்க முடியும்.
அதாவது ரத்தப் பணம் என்பது உயிரிழந்த அந்த நபரின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் நிதி இழப்பீடு. அதற்குப் பதிலாகக் குற்றவாளி விடுவிக்கப்படுவார். எவ்வளவு தொகை வேண்டும் என்பதை மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தான் முடிவு செய்வார்கள். ஆனால், இது அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை.
சிக்கல் என்ன: இதுவரை நிமிஷா பிரியாவை விடுவிக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. ஏனென்றால் முதலில் இந்த பேச்சுவார்த்தை நடத்தக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நேரடியாகப் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரைப் பார்த்து முறையிட வேண்டும். இதற்காகத் தான் நிமிஷா பிரியாவின் தாயார் முயன்று வருகிறார். இருப்பினும், ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாகக் கடந்த 2017 முதல் இந்தியக் குடிமக்கள் அங்கே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரியாவின் தாயாரால் ஏமனுக்கு செல்ல முடியவில்லை. இது தொடர்பாக அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரியாவின் உயிர் ஆபத்தில் இருப்பதால் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இப்படி அடுத்தடுத்து பரபர நிகழ்வுகள் நடந்து வருகிறது. பிரியாவை காக்க ரத்த பணம் மட்டுமே ஒரே வழியாக இருக்கும் நிலையில், மத்திய அரசும் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications