OBC-யை போல் எஸ்சி - எஸ்டிக்கும் ‛கிரீமி லேயர்’ முறை! உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபர கருத்து இதுதான்
டெல்லி: எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது 4 நீதிபதிகள் ஓபிசியினருக்கு பின்பற்றப்படும் ‛கிரீமி லேயர்' முறையை எஸ்சி, எஸ்டிக்களுக்கு கொண்டு வரை அரசு புதிய கொள்கையை வகுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ‛கிரீமி லேயர்' என்றால் என்ன? எஸ்சி, எஸ்டிக்களில் ‛கிரீமிலேயர்' பின்பற்றப்பட்டால் என்ன நடக்கும்? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கடந்த 2009ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி தலித்துகளுக்கான18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கினார். அதேபோல் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் தலித்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழகத்தை எடுத்து கொண்டால் தலித்களின் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கு தடைக்கோரி புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு யசோதா என்பவரின் மனுவை தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இப்படியாக உள் இடஒதுக்கீடு தொடர்பான 20 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2020ம்ஆண்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உள் இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் பட்டியலின சமூகங்களிடையே உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருந்தது.
7 நீதிபதிகள் அமர்வு: இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத், பீலா திரிவேதி, பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் பீலா திரிவேதியை தவிர பிற 6 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். பீலா திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதன்படி ஒரே தீர்ப்பு வழங்கிய 6 நீதிபதிகளும் பட்டியலினத்தவர்- பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் மாநில அரசுகள் தலையிட முடியும் எனக்கூறினர். இதன்மூலம் தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க அனுமதித்து உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
கிரீமி லேயர்: மேலும் இந்த வழக்கில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயத்தையும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதாவது ஓபிசி பிரிவில் இருப்பதை போல் எஸ்சி பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரைமுறை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தது. இதுதொடர்பாக 4 நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். நீதிபதி பிஆர் கவாய் கூறுகையில், ‛‛ பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர் இடையே கிரீமி லேயர் முறையை உருவாக்கி தொடர்ந்து பலன் பெறுவதில் இருந்து விலக்கி வைக்க மாநில அரசுகள் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி உண்மையான சமத்துவத்தை அடைவதற்கு இந்த நடவடிக்கை அவசியம். இடஒதுக்கீடு மூலம் பயனடைந்த தனிநபர்களின் குழந்தைகளை, இல்லாதவர்களுடன் ஒப்பிடக் கூடாது'' என்றார்.
நீதிபதி பிஆர் கவாய்: நீதிபதி பிஆர் கவாயின் இந்த கருத்தை நீதிபதி விக்ரம் நாத் ஆதரித்தார். அவர் கூறுகையில், ‛‛எஸ்சி, எஸ்டி பிரிவினர் இடையே ‛கிரீமி லேயர்' வரைமுறை கொண்டு வர வேண்டும். ஆனாலும் கிரீமி லேயரை விலக்குவதற்கான அளவுகோல் என்பது ஓபிசிக்களுக்கு இருக்கும் நடைமுறையில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும். மேலும் இடஒதுக்கீடு முறையை தொடர்ந்து செயல்படுத்துவதோடு, உண்மையிலேயே அந்த குறிப்பிட்ட சமுதாயத்தில் பின்தங்கி உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் புதிய மறுமதிப்பீடு செய்ய வேண்டும்'' என்றார்.
முதல் தலைமுறைக்கு மட்டும்: அதேபோல் நீதிபதி பங்கஜ் மிட்டல், ‛‛இடஒதுக்கீடு என்பது முதல் தலைமுறையினருக்கானதாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு மூலம் முதல் தலைமுறையை சேர்ந்தவர் உயர்ந்த இடம் செல்லும்போது அவரது அடுத்த தலைமுறை இடஒதுக்கீடு பலனை பெற கூடாது'' என்று கூறினார். மேலும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ‛‛எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் கிரீமி லேயர் முறையை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
கிரீமி லேயர் என்பது என்ன: இந்தியாவை பொறுத்தவரை கிரீமி லேயர் என்பது அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு சலுகைகளில் இருந்து விலக்கி வைக்கப்படும் வரம்பாக உள்ளது. இது தற்போது ஓபிசி பிரிவில் நடைமுறையில் உள்ளது. இந்த கிரீமி லேயர் என்பது உண்மையிலேயே பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வழிவகுக்கும் வகையில் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதன்படி ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பங்கள் கிரீமி லேயராக கருதப்படுகிறது. இந்த வருமானம் என்பது அவ்வப்போது அரசால் மாற்றம் செய்யப்பட்டு வரும். தற்போதைய கிரீமி லேயர் முறை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பொருந்தாது. இத்தகைய சூழலில் தான் கிரீமி லேயர் முறையை எஸ்சி இடஒதுக்கீடு முறையிலும் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications