இனி வெயிட்டிங் லிஸ்ட் டென்ஷன் இல்லை.. புதிய சார்ட் ரூல்ஸ் எப்படி செயல்படும்! நிம்மதியில் பயணிகள்!
டெல்லி: ரயிலில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு டிக்கெட் உறுதியாகுமா அல்லது வெயிட்டிங் லிஸ்டிலேயே நீடிக்குமா என்பது தான் எப்போதும் மிகப் பெரிய கவலையாக இருக்கும். குறிப்பாகத் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்பவர்கள், கடைசி நிமிடம் வரை காத்திருந்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்க, இந்திய ரயில்வே தற்போது அதிரடியான புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பொது போக்குவரத்து என்றால் அது ரயில்வே தான். ஒவ்வொரு நாளும் பல கோடி மக்கள் ரயில்களில் பயணிக்கிறார்கள். பயணிகளின் வசதியை மேம்படுத்த ரயில்வே துறை தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே கடந்த டிசம்பர் 12ம் தேதி ரயில்வே அமைச்சகம் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் முதல் முன்பதிவு அட்டவணை (First Reservation Chart) தயாரிக்கும் நேரத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.. முன்பு ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு அட்டவணை ரெடி செய்வார்கள். இதனால் காத்திருப்பு பட்டியலில் இருப்போருக்கு டிக்கெட் கிடைக்குமா என்பதில் திக்திக் தொடர்ந்து இருந்து வந்தது.
சார்ட்
காலை பயணங்களுக்கு, அதாவது உங்கள் ரயில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணிக்குள் கிளம்புகிறது என்றால், அதற்கான முதல் சார்ட் முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கே தயாராகிவிடும். இதன் மூலம் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிட முடியும். மதியம் மற்றும் இரவு பயணங்களுக்கு, அதாவது மதியம் 2 மணிக்கு மேல் அல்லது நள்ளிரவு நேரங்களில் கிளம்பும் ரயில்களுக்கு, ரயில் புறப்படுவதற்குக் குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே முதல் சார்ட் தயாரிக்கப்படும்.
இறுதி சார்ட்
இது தவிர இறுதி சார்ட் (Second Chart) தனியாக ரெடி செய்யப்படும். அது வழக்கம்போல, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். இதில் காலியாக உள்ள தட்கல் இடங்கள், RAC பயணிகளுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் ரயிலின் எந்தவொரு சீட்டும் வீணாகாது. மேலும், பயணிகளும் தங்களுக்கு சீட் கிடைக்குமா வேண்டாமா எனக் குழப்பத்தில் இருக்கத் தேவையில்லை.
மாற்று ஏற்பாடுகள்
கிராமப்புற இடங்களிலிருந்து நீண்ட தூர ரயில்களைப் பிடிக்க வருபவர்களுக்கு, டிக்கெட் உறுதியாகுமா என்பது தெரியாமல் கிளம்புவது பெரிய மன உளைச்சலைத் தரும். 10 முதல் 15 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் தெரிந்துவிடுவதால், டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றால் அவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்யப் போதிய நேரம் கிடைக்கும்.
பயணிகளுக்கு நன்மை
முதல் சார்ட் தயாரான பிறகு ரயிலில் இடங்கள் காலியாக இருந்தால், பயணிகள் இறுதி சார்ட் தயாராவதற்கு முன்னதாகவே அந்த இடங்களை ஆன்லைன் அல்லது கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் கடைசி நேரத்தில் பயணங்களைத் திட்டமிடுவோரும் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தட்கல் கோட்டாவில் நிரம்பாத இடங்கள் RAC பயணிகளுக்குக் கிடைக்கும் என்பதால், கடைசி நிமிடத்தில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகும் வாய்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
ரயில்வேயின் இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்று வருகிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில், கடைசி நிமிடம் வரை பயணிகளைப் பதற்றத்தில் வைத்திருப்பது தேவையற்றது. 10 மணி நேரத்திற்கு முன்பே நிலவரத்தைத் தெரிவிப்பதன் மூலம், பயணிகளின் பயணத் திட்டமிடல் எளிதாகும்.














Click it and Unblock the Notifications