இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம்.. இனி எதிரிகளால் வாலாட்டவே முடியாது.. சாதித்து காட்டிய டிஆர்டிஓ!
டெல்லி: மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளனர். இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு என்றால் என்ன.. இது ஏன் ரொம்பவே முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டின் டிஆர்டிஓ.. அதாவது மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தொடர்ச்சியாக பல்வேறு ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்து வருகிறது.

அதன்படி சமீபத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளனர். இது ஏன் முக்கியம்.. இது இந்திய ராணுவத்திற்கு எப்படி வலிமை சேர்க்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வரலாறு என்ன: 1990கள் இறுதியில் இந்தியாவை விடப் பாகிஸ்தானிடம் தான் அதிகளவில் ஏவுகணைகள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் பல நாடுகள் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததே இதற்குக் காரணம்.. அப்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டிப்போட்டுக்கொண்டு பாகிஸ்தானுக்கு ஏவுகணைகளை வழங்கின. அந்த ஏவுகணைகள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் Interceptor missileகள் இந்தியாவுக்குக் கட்டாயம் தேவைப்பட்டது.
இதற்காகச் சிறப்புத் திட்டமும் உருவாக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதைத் தொடங்கி வைத்தார்..அப்படி தான் நமது நாட்டில் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உருவானது. ஒவ்வொரு நாடும் அவர்களின் வான்வெளியை எதிரி நாட்டு விமானம், ஏவுகணை, டிரோன் ஆகியவற்றிடமிருந்து பாதுகாக்க ஏர் டிபன்ஸ் சிஸ்டம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவார்கள்.
பாலிஸ்டிக் ஏவுகணைகள்: நமது இந்தியாவும் இதுபோல பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வலுவாக வைத்திருக்கிறது. எதிரிகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை எவ்வளவு தொலைவில் இடைமறித்து அழிக்க முடிகிறது என்பதைப் பொறுத்து இதில் பல வகைகள் இருக்கிறது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் முதல் கட்டத்தில் 2000 கிமீ தொலைவு வரை எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.
இவை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இருந்து இந்தியாவைத் தாக்க ஏவுகணை அனுப்பப்படுகிறது என்றால் இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு நம்மைக் காக்கும்.
அழிக்க முடியும்: அடுத்து இப்போது சுமார் 5000 கிமீ தொலைவில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா இப்போது சோதித்து இருக்கிறது. ஏவுகணைகளை அதிக உயரத்தில் வரும் போதே அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
அதிக தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளையும் இதனால் இடைமறித்துத் தாக்க முடியும் என்பதால் இதற்கு வலிமையான ரேடார் தேவை. அந்த ரேடாரும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்வார்ட் ஃபிஸ் (Swordfish Radar) என்ற ரேடாரை பயன்படுத்தியுள்ளனர்.
வெற்றிகரமாகச் சோதனை: இந்த அமைப்பைத் தான் சமீபத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் தான் இந்த சோதனை நடந்திருக்கிறது. இந்த சோதனையில் ரேடார் டிராகிங், ஏவுகணை வழிகாட்டுதல் மற்றும் தகவல் தொடர்பு எப்படி இருக்கிறது என்பது குறித்தும் சோதித்துள்ளனர். உலகளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் நாடுகளிடம் மட்டுமே இந்த அதிநவீன தொழில்நுட்பம் இருக்கும் நிலையில், அந்த லிஸ்டில் இந்தியாவும் இப்போது இணைந்துள்ளன.












Click it and Unblock the Notifications