நாடாளுமன்ற தாக்குதலில் உண்மையில் நடந்தது என்ன? குற்றவாளிகளுக்கு இருந்த ஒரே லிங்க்.. பகீர் பின்னணி
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் மிக மோசமான சம்பவம் அரங்கேறிய நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதே நாளில் நேற்று நாடாளுமன்றத்துக்குள் சிலர் அத்துமீறி உள்ளே புகுந்தனர். அவர்களில் இருவர் தங்கள் கைகளில் இருந்த புகை பொருட்களை லோக்சபாவில் வீசினர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
மெகா பிளான்: அதாவது இந்தத் தாக்குதலை அவர்கள் குறைந்தது 18 மாதங்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக அவர்கள் பல மீட்டிங்குகளையும் நடத்தியுள்ளனர். மிகக் கவனமாகத் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அவர்கள் நடத்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதேநேரம் அவர்கள் அனைவருக்கும் இடையே ஒரு பொதுவான லிங்க் இருந்துள்ளது. அதாவது அவர்கள் அனைவரும் 'பகத் சிங் பேன்ஸ் க்ளப்' என்ற சமூக வலைத்தள பக்கத்தைப் பாலோ செய்து வந்துள்ளனர்.
என்ன நடந்தது: 2001இல் நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு நாளில் புது நாடாளுமன்ற கட்டிடத்தில் சில அதிர்ச்சி காட்சிகள் அரங்கேறின. நேற்று சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் மதியம் 1 மணியளவில் பார்வையாளர் கேலரியில் இருந்து லோக்சபாவின் ரூமில் குதித்துள்ளனர்.. மேலும், இருவரும் மஞ்சள் புகை வரும் ஸ்ப்ரே தாக்குதலை நடத்தியுள்ளனர். அதில் சாகர் சர்மா சபாநாயகர் சேரை நோக்கி ஓடினார். இருப்பினும், அவரை அங்கிருந்த எம்பிக்களே பிடித்துத் தாக்கினர்.
அதேபோல நாடாளுமன்றத்திற்கு வெளியே நீலம் ஆசாத் மற்றும் அமோல் ஷிண்டே ஆகியோர் மஞ்சள் மற்றும் சிவப்பு புகையுடன் கூடிய ஸ்ப்ரே தாக்குதலை நடத்தினர். மேலும், சர்வாதிகாரத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். இது குறித்த விசாரணையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெவ்வேறு மாநிலங்கள்: அதாவது இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரும் வேறு வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். சாகர் ஷர்மா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.. அதேபோல மனோரஞ்சன் மைசூரைச் சேர்ந்தவர், நீலம் ஹரியானாவைச் சேர்ந்தவர். அதேபோல அமோல் ஷிண்டே மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மேலும், இவர்களை வீடியோ எடுத்த லலித் ஜா பீகாரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் டெல்லியில் தங்க வீடு கொடுத்த விக்கி சர்மா என்பவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்.
இவர்கள் அனைவரும் முதன்முதலில் மைசூருவில் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு சந்தித்துள்ளனர். அப்போது முதலே இந்தத் தாக்குதல் திட்டத்தைப் போட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் மணிப்பூர் வன்முறைகள் எனப் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசித்துள்ளனர்.
ரகசிய கூட்டங்கள்: பிறகு மீண்டும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம் இவர்கள் மற்றொரு விரிவான கூட்டத்தை நடத்தியுள்ளனர். அப்போது தான் ஒரு விரிவான திட்டத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த போது, சண்டிகர் விமான நிலையம் அருகே இந்த கூட்டம் நடந்துள்ளது. தொடர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை மாதம், நாடாளுமன்ற வளாகத்தை உளவு பார்க்க லக்னோவில் இருந்து சாகர் சர்மா டெல்லிக்கு வந்துள்ளார்.
கடந்த செப். மாதம் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் முதல் கூட்டம் நடந்த நிலையில், அப்போதே இந்த சம்பவத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், அப்போது பாஸ் பெற முடியாததால் இந்தத் தாக்குதலை அவர்களால் நடத்த முடியவில்லை. அதைத் தொடர்ந்து இந்த அமர்வில் திட்டமிட்டுத் தாக்கியுள்ளனர்.
ஆறு பேரும் நாடாளுமன்றத்தின் உள்ளே புகுந்து பிரச்சினை செய்வதே முதல் திட்டம். இருப்பினும், இருவருக்கு மட்டுமே பாஸ் கிடைத்த நிலையில், திட்டத்தை மாற்றி, இரண்டு பேர் உள்ளே மற்றவர்கள் வெளியே எனப் பிரச்சினை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications