உலுக்கிய பொருளாதார நெருக்கடி! இலங்கைக்கு அடுத்த ஆண்டாவது நிம்மதி திரும்புமா! இப்போ எப்படி இருக்கு?
டெல்லி: கடந்தாண்டு இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இலங்கை அதிபர் அந்நாட்டில் இருந்து எல்லாம் தப்பியோட வேண்டிய சூழல் இருந்தது. இப்போது அங்கே என்ன நிலைமை என்பது குறித்துப் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் இந்தாண்டு ரொம்பவே முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கிறது. சர்வதேச அரசியலில் பரபரப்பைக் கிளப்பிய பல சர்வதேச நிகழ்வுகள் இந்தாண்டு நடந்துள்ளது. இது உலக வரலாற்றையே மாற்றக் கூடிய ஒன்றாக இருந்துள்ளது.

நமது அண்டை நாடான இலங்கையில் கடந்தாண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இந்தாண்டு அங்கே என்ன நிலை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இலங்கை நெருக்கடி: இலங்கையைத் திணறடித்த பொருளாதார நெருக்கடி. அங்கே விலை உயர்வு, மின் கட்டணம் ஆகியவற்றால் தன்னெழுச்சி எழுந்த பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்தாண்டு தன்னெழுச்சியாக தொடங்கிய போராட்டத்தால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனால் இலங்கையில் அவசர நிலை கூட பிரகடனத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.
மேலும், இலங்கையில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறிய நிலையில், அதிபர் அலுவலகம் தொடங்கிப் பல முக்கிய இடங்களில் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இதனால் ஒரு கட்டத்தில் நிலைமை கையை மீறிச் சென்றது.
ராணுவம் குவிக்கப்பட்டு, அனைத்து கட்சிகளையும் கொண்ட கேபிடென்ட் எல்லாம் அமைக்கப்பட்டது. அந்த பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்.. இப்போது ஓராண்டிற்குப் பிறகு, அங்கே என்ன நிலைமை இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அடிநாதம் என்ன: இலங்கையில் கடந்தாண்டு ஏற்பட்ட நெருக்கடிக்கு அடிநாதமே அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது தான்.. இலங்கை முற்றிலுமாக சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடு. கொரோனாவால் சுற்றுலாத் துறை முடங்கிய நிலையில், அது பொருளாதாரத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அத்தியாவசிய பொருட்கள் விலையும் உச்சத்திற்குச் சென்றது.
குறிப்பாக டாலர் உள்ளிட்ட பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு அதள பாதாளத்திற்குச் சென்றது. ஒரு டீ அல்லது காபியின் விலை கூட இலங்கை ரூபாய் மதிப்பில் பல நூறு ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது. இத்துடன் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு ஆகியவையும் நிலைமையை மோசமாக மாற்றியது. வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்தது, திடீரென மொத்தமாக கெமிக்கல் உரங்களைக் கைவிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு என்று எல்லா பிரச்சினைகளும் ஒரே நேரத்தில் வந்துவிட்டது.
கொதித்து எழும் மக்கள்: மேலும், எரிபொருளும் கூட ரேஷனில் வழங்கும் நிலை இருந்தது. ஓரிரு முறை இந்தியாவில் இருந்து கூட எரிபொருள் அங்கே கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறையால் பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டது. இதனால் கொதித்து எழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதிபர் மாளிகை எல்லாம் சூறையாடப்பட்டது.
அதன் பிறகு உலக வங்கி, நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் உதவிக்கு வந்தன. அவர்களுடன் சிறப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இந்தாண்டு அங்கே நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. இந்தாண்டு அதன் பொருளாதாரம் 2% வரை சரியும் எனக் கணக்கிடப்படுகிறது. சரிவது நன்மை எனக் கேட்கலாம். கடந்தாண்டு பொருளாதாரம் 7.8% சரிந்த நிலையில், இப்போது சற்று மேம்பட்டு இருக்கிறது என்பதே உண்மை.
அடுத்தாண்டு அதன் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அங்கே நிலைமை முற்றிலுமாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றாலும் கடந்தாண்டு உடன் ஒப்பிடும் போது நிலைமை சற்று பரவாயில்லை என்று சொல்லலாம். பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அடுத்தாண்டாவது அமைதி திரும்பும் என நம்புவோம்.












Click it and Unblock the Notifications