அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் தெரியும்ல.. அதே ஸ்டைல் ஆயுதத்தை உருவாக்கும் இந்தியா! ஆனா ஒரு வித்தியாசம்
டெல்லி: அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் ஆயுதம் எந்தளவுக்கு வலிமையானது என்பதை ஈரான் போரில் உலகமே பார்த்தது. இதற்கிடையே அதேபோன்ற ஒரு அதிநவீன ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் தனது வெர்ஷனில் பங்கர் பஸ்டர் ஆயுதத்தை உருவாக்குவதாகத் தெரிகிறது.
இஸ்ரேல் ஈரான் மோதலில் அமெரிக்கா உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதே மோதல் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக ஈரானின் ஃபோர்டோவ் அணு உலையை அவ்வளவு சீக்கிரம் யாராலும் அழிக்க முடியாத வகையில் உருவாக்கி இருந்தனர். நிலத்திற்கு அடியில் பல நூறு மீட்டர் ஆழத்தில் அந்த உலை அமைக்கப்பட்டு இருந்தது.

பங்கர் பஸ்டர்
இஸ்ரேல் ஆயுதங்களால் அந்த உலையை அழிக்க முடியவில்லை. அப்போது தான் அமெரிக்கா தனது அதிநவீனப் பங்கர் பஸ்டர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை உலகை மிரள வைத்தது. ஃபோர்டோவ் அணு உலையில் ஆழத்திற்குச் சென்று அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் இலக்குகளைத் துல்லியமாகக் காலி செய்தது.
இந்தியாவின் டிஆர்டிஓ
இதற்கிடையே அமெரிக்காவின் இந்தப் பங்கர் பஸ்டர் வெடிகுண்டை போலவே ஒரு அதிநவீன ஏவுகணையை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டின் ஃபோர்டோவ் அணு உலைக்குள் போய் அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் தாக்கி அழித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்னி ஏவுகணை
அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வகையை இதுபோல உருவாக்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இது அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் படைத்தது. தற்போது புதிதாக மேம்படுத்தப்படவுள்ள ஏவுகணை 7500 கிமீ வரை சென்று தாக்கும். மேலும், நிலத்திற்கு அடியில் டார்கெட் இருந்தால் அதுவரை ஊடுருவிச் சென்று தாக்கும் வகையில் அக்னியின் இந்த வேரியண்ட் வடிவமைக்கப்படவுள்ளது.
இந்த ஏவுகணையானது அதிக அளவு வெடிபொருட்களைச் சுமந்து சென்று துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டிருக்கும். வெடிப்பதற்கு முன்பு, சுமார் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் சென்று இலக்கை அழிக்கும் வல்லமை பெற்றதாக இருக்கும்.
இரு வேரியண்ட்கள்
அக்னி-5 ஏவுகணையின் இரண்டு புதிய வகைகளை டிஆர்டிஓ உருவாக்க இருக்கிறது. அவற்றில் ஒன்று, மேற்பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்காகச் சரியானதாக இருக்கும். மற்றொன்று நிலத்துக்கு அடியில் ஊடுருவித் தாக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. புதிய அக்னி-5 ஏவுகணைகள் Mach 8 வேகத்தில் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டிருக்கும். Mach 8 என்பது ஒலியின் வேகத்தை விட எட்டு மடங்கு வேகம் என்பதைக் குறிக்கும். இதை டிஆர்டிஓ வெற்றிகரமாக உருவாக்கிவிட்டால் உலகின் அதிநவீன ஆயுதங்களின் வரிசையில் நிச்சயம் இது இடம் பெறும்.
வேறுபாடு என்ன!
அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் வெடிகுண்டிற்கும் இந்தியா உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்த வகை ஆயுதத்திற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. அதாவது அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் வெடிகுண்டு ஸ்டெல்த் பைட்டர் ஜெட் மூலம் ஏவப்படும். மறுபுறம் இந்தியாவின் ஆயுதம் ஏவுகணை அமைப்பு மூலம் இலக்குகளைத் தாக்கி அழிக்கும்.
முன்னதாக, 'விஷ்ணு' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா சோதனை செய்ய உள்ளது. இந்த ஏவுகணை 1,500 கி.மீ தூரம் வரை Mach 8 வேகத்தில் சென்று, ரேடார்களின் கண்களில் படாமல் இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications