பிரதமர் மோடி லைனுக்கு வந்த முகமது யூனுஸ்! வங்கதேச இந்துக்கள் குறித்து உறுதி! பரபர பின்னணி
டெல்லி: வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பிரதமர் மோடி உடன் தொலைப்பேசி வழியாக உரையாடியுள்ளார். வங்கதேசத்தில் இப்போது நிலவும் நிலைமை குறித்து பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்த முகமது யூனுஸ், அங்கு இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார். இதன் திடீர் போன் காலுக்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வங்கதேசத்தில் ஹசீனாவுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. ஒரு கட்டத்தில் நிலைமை கையைவிட்டுச் சென்றதால் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமர் மோடி: அவருக்குப் பதிலாக அங்கே முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துவிட்ட போதிலும், வங்கதேசத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. குறிப்பாக அங்கே இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்தச் சூழலில் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பிரதமர் மோடி உடன் தொலைப்பேசி வழியாக உரையாடியுள்ளார்.
பிரதமர் மோடியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பல விவகாரங்கள் குறித்துப் பேசியுள்ளார். மேலும், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதியளித்துள்ளார்.
உறுதி: வங்கதேசத்தில் நிலவும் அரசியல் களம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக உள்ள பேராசிரியர் முகமது யூனுஸிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து எடுத்துரைத்தார்.
ஜனநாயகப்பூர்வமான, நிலையான, அமைதியான வங்கதேசம் அமைய இந்தியாவின் ஆதரவு தேவை எனக் கேட்டுக் கொண்டார். பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் உட்பட அனைவரது பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்" என்று பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து மத்திய அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இருதரப்பு உறவை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்: முன்னதாக பிரதமர் மோடி நேற்று தனது சுதந்திர தின உரையில், வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மை குறித்து குறிப்பிட்டார். மேலும், அங்குள்ள இந்தியர்கள் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பில் இந்தியா அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அண்டை நாடுகள் செழிப்பு மற்றும் அமைதியின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் பிரதமர் கூறினார்.
பின்னணி இதுதான்: பிரதமர் மோடி இதுபோன்ற கருத்துகளைக் கூறிய மறுநாளே வங்கதேச இடைக்கால தலைவர் மோடியைத் தொடர்பு கொண்டு இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச வன்முறை: வங்கதேசத்தைப் பொறுத்தவரை இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், மெல்ல அந்நாட்டின் பிரதமர் ஹசீனாவுக்கு எதிராகத் திரும்பியது. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்த நிலையில், 550 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாகப் பல பகுதிகளில் அங்குச் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications