"இதுதான் லிமிட்..!" பொறுத்து பொறுத்து பார்த்த குலாம் நபி ஆசாத்! காங்.இல் இருந்து விலக இதுதான் காரணம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி இப்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, காங்கிரஸ் கட்சியால் சொல்லிக் கொள்ளும் வகையில் வெற்றி பெற முடியவில்லை.
தொடர்ச்சியாக பல்வேறு தேர்தல்களில் தோல்வி அடைந்தே வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப் உள்ளிட்ட வலுவான இடங்களிலும் கூட காங்கிரஸ் தொடர்ச்சியாகத் தோல்வியையே சந்தித்து வருகிறது.

காங்கிரஸ்
தொடர்ச்சியாக இரு மக்களவை தேர்தல்களில் வென்றுள்ள பாஜக, இப்போதே 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராகத் தொடங்கிவிட்டது. ஆனால், மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. பஞ்சாப், கர்நாடகா என வலுவாக இருந்த பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. அதேபோல சிந்தியா, ஹர்திக் படேல், கபில் சிபில் என வரிசையாகப் பல முக்கிய தலைவர்களும் காங்கிரஸில் இருந்து விலகி உள்ளனர்.

குலாம் நபி ஆசாத்
அந்த வரிசையில் இப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இணைந்துள்ளார். மற்ற தலைவர்களை விடக் குலாம் நபி ஆசாத்தின் விலகல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், 1970களில் இருந்து காங்கிரஸ் கட்சியில் பயணித்து வந்தவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் எனப் பல முக்கிய பொறுப்புகளை வகித்த குலாம் நபி யாரும் எதிர்பார்க்காத வகையில் விலகி உள்ளார்.

மோதல்
குலாம் நபி ஆசாத்திற்கும் காங்கிரஸ் தலைமைக்கும் கடந்த சில காலமாகவே மோதல் போக்கே நிலவி வந்துள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமையின் செயல்பாடுகளில் அவருக்கு கடும் அதிருப்தி இருந்ததாகவே தெரிகிறது. கடந்த ஆண்டு அவரது ராஜ்ய சபா எம்பி காலம் முடிவடைந்தது. அப்போது அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி மீண்டும் நீட்டிக்கப்படவில்லை. ஏற்கனவே மோதல் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இந்த முடிவும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தான் எம்பி அல்லது அமைச்சராக இனி இருக்க விருப்பமில்லை என்றும் இனி சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். அப்போதே அவர் காங்கிரஸ் கட்சியில் எந்தவொரு பதவி வகிக்கவும் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜி23 தலைவர்கள்
காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த மூத்த தலைவர்கள் நேரடியாகவே கட்சியின் செயல்பாடுகள் குறித்து டெல்லிக்குக் கடிதம் எழுதி இருந்தனர். மொத்தம் 23 மூத்த தலைவர்கள் இதில் கையெழுத்திட்டு இருந்தனர். இதை முன்னெடுத்துச் சென்றவர் குலாம் நபி ஆசாத் தான். அதைத் தொடர்ந்து அதிருப்தி தலைவர்கள் பல முறை தனியாகக் கூடி ஆலோசித்து உள்ளனர். இதுவே டெல்லி தலைமைக்குத் தனியாக அழுத்தத்தை ஏற்படுத்தியது.

ராஜினாமா
இந்தச் சூழலில் தான் காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் பிரசார குழு தலைவராக சில நாட்களுக்கு முன்பு குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். இருப்பினும், இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களிலேயே இந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். விலகுவதற்கான கடிதத்தில் அவர் தனது உடல்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும், அப்போதே தலைமை மீது இருந்த அதிருப்தி காரணமாகவே அவர் பதவியில் இருந்து விலகியதாகச் சொல்லப்பட்டது.

விலகல்
இந்தச் சூழலில் தான் அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், தலைமை மீது பல்வேறு அடுக்கடுக்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். காங்கிரஸில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் குறிப்பிட்ட நிலையில், அதையே தான் குலாம் நபி ஆசாத்தும் எதிரொலித்துள்ளார்.

ராகுல் காந்தி
குறிப்பாக ராகுல் காந்தி மீது அவர் சரமாரி குற்றச்சாட்டுகளைக் குலாம் நபி ஆசாத் முன்வைத்துள்ளார். 2013இல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கும் முறையை ஒழித்துவிட்டார் என்றும் இப்போது அவர் தலைவராக இல்லை என்றாலும் அவரே முடிவுகளை எடுக்கிறார் என்றும் சாடியுள்ளார். அவ்வளவு ஏன் சில சமயங்களில் ராகுலின் உதவியாளர்கள் கூட முக்கிய முடிவை எடுப்பதாகச் சாடியுள்ளார்.

அடுத்து என்ன
இப்படி பல தலைமைக்கும் குலாம் நபி ஆசாத்திற்கும் இடையே தொடர்ச்சியால பல மோதல்கள் இருந்துள்ளது. இந்தச் சூழலில் தான் பொறுத்து பொறுத்து பார்த்த ஆசாத் இன்று கட்சியில் இருந்தே ஒட்டுமொத்தமாக விலகி உள்ளார். குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட கடந்த சில காலமாகவே டெல்லி தலைமை மீது அவர் கடும் அதிருப்தியிலேயே இருந்து வந்துள்ளது அவரது செயல்பாடுகளில் தெளிவாகத் தெரிகிறது. மூத்த தலைவர்களின் விலகல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு 2024 தேர்தலுக்கு மிகப் பெரிய சிக்கலையே உண்டாக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications