Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக படுதோல்விக்கு என்ன காரணம்? லீக்கான உபி அறிக்கை! யோகி கோட்டைவிட்ட 6 விசயங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் உபியில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன என்பது பற்றிய 15 பக்க அறிக்கையை மாநில நிர்வாகிகள் தேசிய தலைமைக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்பது பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் காலை வாரிய மாநிலம் எவை என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் முதல் இடத்தில் உபிதான் இருக்கிறது. கடந்த 2 சட்டமன்றத் தேர்தல்களில் அங்கே யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகதான் மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் அடுத்தகட்ட தேசிய முகங்களின் பட்டியலில் யோகி முதல் வரிசையில் இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ். ஆதரவில் அவர் அடுத்த பிரதமர் மெட்டிரீயல் என்றும் பாஜகவின் விசுவாசிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறார்.

Yogi Adityanath BJP Uttar Pradesh

பாஜக இந்த மக்களைவைத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விகே பாண்டியன் ஒடிசாவை ஆளக்கூடாது என்று ஒரு பிரச்சாரத்தை முன்வைத்தது. ஆனால், அதேசமயத்தில் குஜராத்தைச் சேர்ந்த மோடி, வாரணாசியில் போட்டியிட்டார். மண்ணின் மைந்தன்தான் மாநிலத்தை ஆளவேண்டும் என்று பாஜக ஒரு பக்கம் பேசிக் கொண்டே மற்றொரு பக்கம் அதற்கு மாறான விசயங்களை நடைமுறைப்படுத்தியது.

குறிப்பாக உபியில் இந்துத்துவா அரசியலைக் கட்டமைத்ததில் யோகி ஆதித்யநாத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அவர் கோரக்பூர் மடத்தில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார். ராமர் கோயில் விவகாரம் உச்சத்திலிருந்த 1990களில் அவர் அந்த இயக்கத்திற்காக வீட்டை விட்டு வெளியேறியவர் இவர். அவரது குடும்பத்திற்கு கோரக்பூர் மடத்தின் தலைமையுடன் ஒரு நெருக்கமான உறவு இருந்தது.

இருந்தாலும் அவர் உபி மண்ணின் மைந்தர் அல்ல. அவர் பிறந்த ஊர் இன்றைக்கு உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது. பாஜக வாதத்தின்படி பார்த்தால் அவர் உத்தரகண்ட் மைந்தர். உபியை ஆட்சி செய்வது சரியா என்ற வாதம் இந்தியா கூட்டணிக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. இந்தியா முழுமைக்குத் தேசிய அரசியலைப் பேசிய பாஜக, ஒடிசாவில் மாநில பிரிவினை வாதத்தைப் பேசியதன் விளைவாக எழுந்த எதிர்ப்பை யோகி தன் மாநிலத்தில் அறுவடை செய்ய நேரிட்டதும் கட்சி பின்னடைவுக்கு ஒரு காரணமாக இருந்துள்ளது.

மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்டுள்ள உபியை எந்தக் கட்சி அதிகப்படியான சீட்டுகளை அறுவடை செய்கிறதோ, அந்தக் கட்சிதான் பிரதமர் பதவியில் உட்காருவதற்கான தகுதியைப் பெறும் என்பது பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு தேர்தல் கணக்காக உள்ளது. அதனடிப்படையில் தான் பாஜக இந்த முறை 70 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆகவேதான் அவசர அவசரமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படுதற்கு முன்பே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் மூலம் உபி முழுவதையும் அறுவடை செய்துவிடலாம் எனக் கணக்குப் போட்டது பாஜக. கடந்த 2019இல் பாஜக 62 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில் இந்த முறை அதன் எண்ணிக்கை 33 ஆகக் குறைந்தது. கடந்த முறை வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த சமாஜ்வாதி இந்த முறை 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அப்படிப் பார்த்தால் பாஜக மிகப்பெரிய சரிவை இந்தத் தேர்தலில் சந்தித்துள்ளது.

இந்நிலையில்தான் உபி தோல்வி குறித்து 15 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றைத் தேசிய தலைமைக்கு அனுப்பியுள்ளது பாஜக மாநிலத் தலைமை. இதற்காக சுமார் 40 ஆயிரம் பேரிடம் நேரடியாகக் கருத்துகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. அதில் பாஜக சறுக்கல் எதனால் ஏற்பட்டது? அதைச் சரி செய்ய மேற்கொள்ள வேண்டியவை என்ன? என்று மக்கள் மனம் திறந்து சில கருத்துகளை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் என்ன என்பது குறித்து தகவல்கள் சில கசிந்துள்ளன. அதாவது இந்த 2024 மக்களவைத் தேர்தலில் உபியில் மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில் பாஜகவின் வாக்குகள் கணிசமாக 8% குறைந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தச் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் உட்கட்சி பூசல்தான் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதீத நம்பிக்கையே தேர்தல் தோல்விக்கு முதல் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் அடிமட்ட தொண்டர்களின் மனநிலையை உளவாக்கிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்றும் அவரை சுற்றி சில உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் இரும்பு வளையம் போட்டு, உண்மை நிலையை எடுத்துச் சொல்லாமல் மறைத்து விட்டனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தொகுதிவாரியாக நிலவிய உட்கட்சி பூசல் குறித்து அவர் அறிந்துகொள்ளவே இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று துணை முதல்வர் கேசவ் மவுரியா நிராகரித்துள்ளார். இவர் 'மக்களைவிட எங்களுக்குக் கட்சியும் அமைப்பும்தான் பெரியது. 2017இல் கட்சி எப்படி வலுவாக இருந்ததே அதேநிலை 2027இல் மீண்டும் பெறுவோம்' என்று கூறியுள்ளார்.

உபி பாஜகவின் தோல்விக்கு 6 காரணங்கள் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளன. அடுத்ததாகக் கட்சி நிர்வாகம் உயர்மட்டத்தோடு முடிந்துவிட்டது. அது அடிமட்ட கட்சி ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்து இருக்கிறது. அத்துடன் யோகி ஆட்சியில் அடிக்கடி வினாத் தாள் கசிவு தொடர்கதையாகி உள்ளது. 2015இல் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது. 2022இல் ஒரு ரிப்போர்ட் வெளியானது. அதில் 5 ஆண்டுகளில் மொத்தம் 18 முறை வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாகவும் அது குறித்துச் சரியான விசாரணை நடத்தப்படவே இல்லை என்று அதில் சுட்டிக்காட்டிப்பட்டிருந்தது.

இப்போது 2024இல் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நெட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது. அதேபோல காவலர் தேர்வில் வினாத்தாள் லீக் ஆனது. அதில் ஆள்மாறாட்டம் கூட நடந்தது. இதனால் படித்துவிட்டு வேலைக்காக முயற்சிக்கும் இளைஞர்கள் லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசின் மீது வெறுப்படைந்துள்ளனர் என்று தோல்விக்கான காரணங்களை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அரசு வேலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது. கூடவே 'இந்தியா கூட்டணி' இடஒதுக்கீட்டை பாஜக ஆட்சிக்கு வந்தால் நீக்கிவிடும் என்ற குற்றச்சாட்டுடன் இந்த விவகாரத்தை மக்கள் பொருத்திப் பார்த்து பீதி அடைந்தனர். ஆகவே, கணிசமான வாக்குகள் சிதறியுள்ளது.

சமீபத்தில் கூட பாஜக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல், மாநில அரசுப் பணிகளில் ஒபிசி வகுப்பவருக்கான இடஒதுக்கீட்டை நிரப்புவதில் அரசு தாமதம் காட்டி வருவதாக யோகிக்கு கடிதம் எழுதி இருந்தார். இவரது அப்னா தள் கட்சி குர்மி மக்கள் மத்தியில் செல்லாக்கு உள்ளதாக இருக்கிறது. ஆகவே, இடஒதுக்கீடு என்பதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைமைக்கு தரப்பட்ட அறிக்கையில் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாகச் சொல்லப்போனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அதனால் எம்.எல்.ஏக்களின் குரல் எடுபடவில்லை என்று குற்றச்சாட்டைக் கட்சியினர் முன்வைத்துள்ளனர். அதையும் இந்த அறிக்கை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

கட்சி எடுத்துள்ள சர்வேவின் படி உபி மேற்கு, காசி, வாரணாசி ஆகிய பகுதிகளில் கட்சியின் செயல்பாடு மிக மோசமான நிலையிலிருந்துள்ளது வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றிவாகை சூடியுள்ளது. மேற்கு உபியில் உள்ள 13 இடங்களில் 8 இடங்களை மட்டுமே வெற்றியடைந்துள்ளது. முதல்வர் யோகியின் கோட்டையான கோரக்பூரில் உள்ள 13 தொகுதிகளில் 6 இல் மட்டுமே பாஜக வென்றுள்ளன. அதேபோல் லக்னோ, அயோத்தி, பைசாபாத் உள்ளிட்ட மொத்த 16 தொகுதிகளில் 7 இல் மட்டுமே பாஜக தனது வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது 10இல் 4 தொகுதிகளை மட்டுமே இந்தத் தேர்தலில் பாஜக தக்க வைத்துள்ளது.

உபி சட்டசபையில் பல்வேறு காரணங்களால் 10 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில், பாஜக பழைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. யோகி தலைமீது ஒரு கத்தி தொங்கிக் கொண்டுள்ளது. பாஜக தேசிய தலைமை இந்த 10 தொகுதிகளைக் குறிவைத்து வேலைகளைத் தொடங்கும்படி கட்டளை பிறப்பித்துள்ளது. ஆனால், யோகியின் ஆதரவாளர்கள், 'தேர்தலில் சீட்டு வழங்கிய போது முதல்வரிடம் கலந்தாலோசிக்கவே இல்லை.

அதில் அவரது பங்களிப்பு இல்லை. செல்வாக்கற்ற வேட்பாளரின் பெயரை அறிவித்துவிட்டு, மீண்டும் திரும்பப் பெறுவது போன விசயங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவை ஏற்படுத்தி இருக்கின்றன. அதைக் கட்சி மேலிடம் கவனத்தில் கொள்ள வேண்டும். யோகி கடந்த 2 முறை மாநிலத்தில் கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர். அதற்கு அவரது நேர்மையும் அர்ப்பணிப்புதான் காரணம்' என்ற கருத்தை தலைமையிடம் முன்வைத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+