"மனித தவறு.. அதிகாரிகள் அலட்சியம்.." 293 உயிரை குடித்த ஒடிசா ரயில் விபத்து! உண்மையில் என்ன காரணம்
டெல்லி: கடந்த மாதம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சுமார் 290 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து இப்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ஒடிசாவில் மிக மோசமான ரயில் விபத்து ஏற்பட்டது. அப்போது கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் வந்து கொண்டிருந்த போது, லைன் மாறி சென்றதில் சரக்கு ரயிலில் மோதி தடம் புரண்டது.
அப்போது அருகே வந்த மற்றொரு ரயிலும் இதில் மோதி தடம் புரண்டது. இந்தியாவில் சமீப காலத்தில் மிகவும் மோசமான விபத்துகளில் ஒன்றாக மாறியது. இந்த விபத்தில் சுமார் 293 பேர் உயிரிழந்தனர், 1000 மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஒடிசா ரயில் விபத்து: இந்த விபத்து நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த மோசமான ரயில் விபத்து அரங்கேறி ஒரு மாதம் ஆகும் நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இதற்கான காரணத்தைப் பதிவு செய்துள்ளனர். முதலில் ரயில் விபத்து நடந்த போது சிக்னல் ஹேக் செய்யப்பட்டு சதி செய்யப்பட்டிருக்கலாம் என்று எல்லாம் கூறப்பட்டிருந்தது. இதன் விசாரணையும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் மனித தவறே விபத்திற்குக் காரணம் என்பதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசவேலை தொழில்நுட்பக் கோளாறு அல்லது இயந்திரக் கோளாறு என்பதை அவர் நிராகரித்துள்ளார். சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனித தவறே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் அலட்சியம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத அதிகாரிகளின் அலட்சியம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
சிக்னலிங் பிரிவில் உள்ளவர்கள் மட்டுமின்றி, வடிவமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் உள்ள பாதுகாப்பு செயல்முறைகள் புறக்கணிக்கப்பட்டுக் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே அமைச்சகம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
மனித தவறு: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தண்டவாளங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் சென்ட்ரல் வரைபடத்தில் அப்டேட் ஆகவில்லை. பின்னர் செய்யப்பட்ட வருடாந்திர ஆய்விலும் இது குறித்து அவர்கள் எச்சரிக்கவில்லை. எனவே இது ஒரு நபரின் பிழை அல்ல, குறைந்தது ஐந்து பேர் இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்றார்.
கொல்கத்தா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியது. கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிக மோசமான ரயில்வே விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.
நாசவேலையா: ரயில்வே ஆணையரின் அறிக்கை நாசவேலையைக் குறிக்கவில்லை என்றாலும், சிபிஐ விசாரணை ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அது தொடர்ந்து நடக்கும் என்றும் இதனால் இந்த சிஆர்எஸ் அறிக்கையை இப்போதைக்குப் பொதுவெளியில் வெளியிடப்படாது என்றும் தெரிகிறது. நாசவேலை இல்லை என்பது உறுதியானாலும் இந்த சிஆர்எஸ் அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சிபிஐ அறிக்கை இந்திய ரயில்வே பாதுகாப்பு அமைப்புகளை மறுசீரமைக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விபத்துகள் தடுக்கும் செயல்முறையைக் கொண்டு வர உள்ளோம். இருப்பினும், நாடு முழுக்க இந்த செயல்முறையை அமல்படுத்தக் குறைந்தது 3,4 ஆண்டுகள் ஆகும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications