ஹார்முஸ் ஜலசந்தி என்றால் என்ன? இதை மூடினால் இந்தியா எப்படி முடங்கும்! மாற்று வழிகள் எதாவது இருக்கா?
டெல்லி: இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் தீவிரமாகியுள்ளது. இதில் அமெரிக்காவும் உள்ளே வந்துள்ள நிலையில், இப்போது பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஈரானும் கூட ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என எச்சரித்துள்ளது. அதென்ன ஹார்முஸ் ஜலசந்தி.. இதனால் ஏற்படும் உண்மையான பாதிப்பு என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
ஹார்முஸ் ஜலசந்தி என்பது சாதாரண கடல்வழிப் பாதை மட்டுமல்ல.. இது சர்வதேச எரிசக்தி ஓட்டத்திற்கான உயிர்நாடியாகவும் விளங்குகிறது. இஸ்ரேல் ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகம் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளின் எரிசக்தி விநியோகத்தைப் பெரிதும் நம்பியுள்ள இந்தியாவைப் போன்ற நாடுகள் இதில் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம்
ஈரான் மற்றும் ஓமன்- ஐக்கிய அமீரகம் இடையே அமைந்துள்ள குறுகிய நீர்வழி தான் இந்த ஹார்முஸ் ஜலசந்தி. இது பெர்சியன் வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கிறது. இது குறுகலான இடம் வெறும் 55 கி.மீ மட்டுமே அகலம் கொண்டது. இது உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து முனையமாக இது கருதப்படுகிறது.
இது ஏன் முக்கியம்
- இந்த நீர் வழித்தடம் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் (2024 டேட்டா) செல்கிறது. அதாவது ஒட்டுமொத்த சர்வதசே எண்ணெய் வர்த்தகத்தில் 25%.
- சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அமீரகம், குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த ரூட் வழியாகவே எண்ணெய் செல்கிறது.
- இந்த ரூட்டில் செல்லும் எண்ணெய்யில் சுமார் 80% ஆசிய நாடுகளுக்கு.. குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு செல்கிறது.
- கச்சா எண்ணெய் மட்டுமின்றி இயற்கை எரிவாயுவுக்கும் (LNG) இந்த ஜலசந்தி ஒரு முக்கிய பாதையாக உள்ளது.. குறிப்பாக உலகின் முன்னணி எல்என்ஜி ஏற்றுமதியாளரான கத்தாரிலிருந்து இந்த ரூட் வழியாகவே ஏற்றுமதி அதிகம் நடக்கிறது.
இந்தியாவுக்கு ஏன் இது முக்கியமானது?
- வளைகுடா பிராந்தியத்திலிருந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தான் இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
- இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40% இந்த ஜலசந்தி வழியாகவே வருகிறது.
- இந்தியாவின் எல்என்ஜி இறக்குமதியில் சுமார் 54% இந்த சேனல் வழியாகச் செல்கிறது
- இந்தியா தினசரி 5.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நிலையில், அதில் சுமார் 1.5 மில்லியன் பேரல்கள் ஹார்முஸ் வழியாகவே வருகிறது.
இந்த ரூட்டில் நீண்ட காலம் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அது பல வழிகளில் இந்தியாவைப் பாதிக்கும். முதலில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கும். சுத்திகரிப்பு திறன் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளும் கூட பாதிக்கும். இதனால் நிதிப் பற்றாக்குறை ஏற்படலாம். மேலும், ரூபாய் ஸ்திரத்தன்மைக்கும் கூட அழுத்தம் உருவாகும்.
இந்தியாவுக்கு வேறு ஆப்ஷன்களும் கூட பெரிதாக இல்லை. தற்காலிகமாகச் சமாளிக்க வேண்டும் என்றால் ஆப்பிரிக்க நாடுகள் (நைஜீரியா மற்றும் அங்கோலா போன்றவை), அமெரிக்கா ஆகியவற்றிடம் இறக்குமதி செய்யலாம். அல்லது கையிருப்பில் இருக்கும் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். ஆனால், இவை தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும்.
பாதிப்பு என்ன?
இந்த ஜலசந்தி ஈரானுக்கு மிக அருகில் உள்ளது. இதனால் ஈரான் நினைத்தால் இந்த ஜலசந்தியை மூடவும் முடியும். அல்லது குறிப்பிட்ட நாடுகளின் கப்பல்கள் இதைக் கடந்து போகக்கூடாது என எச்சரிக்கவும் முடியும். உதாரணமாக, டேங்கர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் அல்லது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம். அல்லது கப்பல்கள் கடத்தப்படலாம். கண்ணிவெடிகள் வைப்பது அல்லது ராணுவ முற்றுகைகள் மூலம் கப்பல் போக்குவரத்தைப் பாதிக்கலாம். இப்படி ஈரான் வசம் பல ஆப்ஷன்கள் உள்ளன.
கடந்த காலங்களில் பல மோதல்களை ஈரான் சந்தித்துள்ள போதிலும் இந்த ஹார்மூஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டதே இல்லை. 1980களில் ஏற்பட்ட மோதல், 2011-12 பொருளாதாரத் தடைகள், 2019 அமெரிக்க-ஈரான் பதற்றம் இருந்தபோதும் ஜலசந்தியில் போக்குவரத்து பாதித்ததே தவிர அது முழுமையாக மூடப்படவில்லை.
பொருளாதார தாக்கம்
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும். ஏற்கனவே ஒரு வாரத்தில் அது 3% மேல் உயர்ந்துள்ளது.
- பிரெண்ட் கச்சா எண்ணெய் இப்போது ஒரு பீப்பாய் 77.01 டாலராக உள்ளது. தாக்குதல் தொடர்ந்தால் அது 90 அல்லது 100 டாலரை கூட தாண்டும்.
- இந்த பாதை மூடப்பட்டால் போக்குவரத்து செலவுகளும் அதிகரிக்கும்.
தற்போதைய சூழலில் மாற்று வழிகள் இருந்தாலும் அவை பெரியளவில் இல்லை. சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய் ஹார்முஸைத் தவிர்த்து, செங்கடல் வரை நீள்கிறது. ஐக்கிய அமீரகத்தின் ஹப்சன்-புஜைரா குழாய் ஹார்முஸ் ஜலசந்தியை தவிர்க்கிறது. ஈரானின் கோரே-ஜாஸ்க் குழாய் அதன் எண்ணெய் ஏற்றுமதி திறனை ஓமன் வளைகுடா வரை நீடிக்கிறது. ஆனால், இவை எல்லாம் ஓரளவுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும். முழு வீச்சில் ஏற்றுமதியைச் செய்யும் அளவுக்கு இவை போதுமானதாக இருக்காது என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications