விவிபேட் இயந்திரம் என்றால் என்ன! இன்று இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் எப்படி சரிபார்க்கப்படும்?
டெல்லி: லோக்சபா தேர்தல் வரும் போதெல்லாம் நாம் விவிபேட் என்ற வார்த்தையை கேள்விப்படுவோம். . ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போதும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது.. அதென்ன விவிபேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கையில் அது எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்துப் பார்க்கலாம்.
இன்று லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் பாஜகவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது.

தேர்தல் சமயத்தில் விவிபேட் இயந்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போதும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
விவிபேட் என்றால் என்ன: Voter Verifiable Paper Audit Trail என்பதன் சுருக்கமே விவிபேட் என்பதாகும். இவை பொதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் இணக்கப்பட்டு இருக்கும். தான் வாக்களிக்கும் நபருக்கே வாக்குப் பதிவு செய்யப்படுகிறது என்பதை வாக்காளர் உறுதி செய்து கொள்ள இது பயன்படுகிறது.
நாம் வாக்களித்த உடன் அது குறித்த தகவல்கள் விவிபேட் இயந்திரத்தில் இருக்கும் ஸ்லிப்பில் தெரியும். அதில் வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் கட்சியின் சின்னம் இருக்கும். வாக்காளர் அதைச் சரி பார்க்க ஏழு வினாடிகள் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அந்த ஸிலிப் அங்குள்ள பெட்டியில் விழுவது போல செட் செய்யப்பட்டு இருக்கும்.
எப்போது: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பலரும் அது குறித்து சந்தேகம் எழுப்பிய நிலையில், தேர்தல் ஆணையம் முதலில் கடந்த 2010இல் விவிபேட் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து ஜூலை 2011இல் லடாக், திருவனந்தபுரம், சிரபுஞ்சி, கிழக்கு டெல்லி மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் இவை டெஸ்ட் செய்யப்பட்டன.
அதன் பிறகு சில மாறுதல்கள் செய்யப்பட்டு 2013ஆம் ஆண்டில் நாகாலாந்தில் உள்ள நோக்சன் சட்டமன்றத் தொகுதியில் இது முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அங்கு மொத்தம் 21 வாக்குச் சாவடிகளில் இருந்த நிலையில் அனைத்திலும் இது பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 2017இல், தேர்தல்கள் போது 100% இவை பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையில் ஏன் முக்கியம்: இந்த விவிபேட் VVPAT ஸ்லிப்பை எந்தவொரு வாக்காளரும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது. அவை அந்த பெட்டியிலேயே விழுந்துவிடும். தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது அவை சரிபார்க்கப்படும். அதாவது இன்று சரிபார்க்கப்படும். அதற்காக அனைத்து தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவாகும் வாக்குகளும் சரிபார்க்கப்படும் என்று இல்லை.
எத்தனை வாக்குச்சாவடிகள்: ஒரு சட்டசபை தொகுதியில் உள்ள ஐந்து வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் இதுபோல சரி பார்க்கப்படும். அதாவது வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்குகள் விழுந்துள்ளன என்பது எண்ணப்படும். பிறகு விவிபேட் ஸ்லிப்கள் எண்ணப்பட்டு முடிவுகள் சரி பார்க்கப்படும். முதலில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டுமே இதுபோல சரிபார்த்து வந்தார்கள். கடந்த 2019இல் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இது ஐந்து வாக்குச் சாவடிகளாக உயர்த்தப்பட்டன.
இந்த ஐந்து வாக்குச் சாவடிகளும் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும். வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியால் சீட்டுக் குலுக்கல் முறையில் இந்த ஐந்து வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்படும். அதன்படியே இன்றும் வாக்கு எண்ணிக்கையின் போது 5 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் விவிபேட் இயந்திரங்களுடன் சரிபார்க்கப்படும்.












Click it and Unblock the Notifications