2 ஆண்டு சிறை, எம்பி பதவி பறிப்பு.. ராகுலை எப்போதும் விமர்சிக்கும் தேர்தல் ஆலோசகர் பிகே என்ன சொன்னார்
டெல்லி: ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தில் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலரில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் ராகுல் காந்தி பேசிய பேச்சு இப்போது அவருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் சமீபத்தில் தான் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது எம்பி பதவியையும் இழந்துள்ளார். இதற்கிடையே பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் ஒரே போல இருப்பதாகச் சொல்லி, அதன் பிறகு சர்ச்சை கருத்து ஒன்றைத் தெரிவித்தார். ராகுல் காந்தி தனது பேச்சின் மூலம் ஒட்டுமொத்தமாக மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியைக் குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தார்.

எம்பி பதவி பறிப்பு
இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே தனது சொந்த மாநிலமான பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதேநேரம் காங்கிரஸை விமர்சிக்கவும் அவர் தவறவில்லை.

கொஞ்சம் அதிகம் தான்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் ஒன்னும் சட்ட நிபுணர் அல்ல.. ஆனாலும், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகம் என்றே நினைக்கிறேன்... தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்கள் ஆவேசமாகத் தான் பேசுவார்கள். தேர்தல் காலத்தில் ஒருவர் இதுபோல பேசுவது இது முதல்முறை இல்லை.. இது கடைசி முறையாகவும் நிச்சயம் இருக்காது. இது ஒரு அவதூறு வழக்கு. இதற்கு இரண்டு ஆண்டுகள் சிறை எல்லாம் அதிகம் என்றே நான் நினைக்கிறேன்.

அவசரம் காட்டியிருக்கக் கூடாது
மத்தியில் இருப்பவர்களிடம் நான் வாஜ்பாயின் ஒரு பிரபலமான வரியை நினைவூட்ட விரும்புகிறேன்.. சிறிய இதயம் கொண்டவர்கள் யாரும் பெரியவர்களாக மாற மாட்டார்கள். ஆளும் தரப்பில் இருப்பவர்கள் சட்ட நுணுக்கங்களைக் காரணம் காட்டுகின்றனர். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையைச் சுட்டிக் காட்டி ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தவிர்க்க முடியாதது என்று கூறுவார்கள். இருந்தாலும், அவர்கள் தங்கள் சொந்த தலைவரான மறைந்த வாஜ்பாயின் கருத்தைப் பின்பற்றியிருக்க வேண்டும். ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்ய அவசரம் காட்டியிருக்கக் கூடாது.

அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்
இன்றைக்கு அவர்கள் (பாஜக) ஆட்சியில் உள்ளனர். பெரிய மனதுடன் இருக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அவர்கள் சில நாட்கள் காத்திருந்து, மேல்முறையீடு செய்ய அவகாசம் தந்திருக்க வேண்டும். அப்படி அவகாசம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் காங்கிரஸ் தாங்கள் யாரை எதிர்த்து நிற்கிறோம் என்பதைத் துளியும் உணரவில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் டெல்லி தலைமை ஒன்றை உணர வேண்டும்.

காங்கிரஸ் உணரவே இல்லை
டெல்லியில் அமர்ந்து கொண்டு ஆவேசமாக ட்வீட் செய்வதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு அணிவகுப்பு நடத்துவதன் அரசியலில் வெல்ல முடியாது. நான் உதாரணம் சொல்கிறேன். இப்போது நான் சரண் மாவட்டத்தின் மர்ஹௌரா தொகுதியில் இருக்கிறேன். மக்களைச் சந்தித்து, இது எப்படி ஒரு அநீதி என்பதை மக்களுக்கு விளக்கும் ஒரு காங்கிரஸ் தொண்டரையும் நான் இதுவரை பார்க்கவில்லை.. நாடு முழுக்க மக்களை அவர்கள் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், இதுபோல எதையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை..

போரை வெல்ல முடியாது
காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு கட்சியாக இருந்தாலும் வெறும் செய்தியாளர் சந்திப்பு, ட்வீட்கள் மூலம் இருப்பை காட்டிக் கொள்ளலாம். ஆனால் கிராமங்களைச் சென்றடையாத வரை, அரசியல் போரில் வெற்றி பெற முடியாது என்பதை உணர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியைக் கடந்த காலங்களில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தே வந்துள்ளார். இந்தச் சூழலில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோரும் கருத்துச் சொல்லியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications