தன்பாலின திருமணம் ரொம்பவே தப்பு! பாலியல் "நோய்கள்" அதிகரிக்குமாம்.. ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு பரபர
டெல்லி: தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், இது குறித்து ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளனர்.
இந்தியா உட்படப் பல நாடுகளிலும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பல வித பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் முதல்முறையாகக் கடந்த 2018இல் தன்பாலின ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டது. தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த வரலாற்றுத் தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
தன்பாலின திருமணம்: இதனிடையே தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், பல மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் தன்பாலின ஈர்ப்பை ஒரு "கோளாறு" என்றும், தன்பாலின திருமணத்தை அங்கீகரித்தால் அது சமூகத்தில் தன்பாலின ஈரப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் ஆர்எஸ்எஸ் பெண்கள் பிரிவான சம்வர்தினி நியாஸ் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி நடத்திய சர்வேவில் பல வல்லுநர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதில், "நாடு முழுக்க இருக்கும் பல வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்டு இந்த சர்வேவை உருவாக்கியுள்ளோம். அதில் சுமார் 70 சதவீத மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஓரினச்சேர்க்கை ஒரு கோளாறு என்றும் 83 சதவீதம் பேர் இதன் மூலம் பாலியல் நோய் பரவும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சீர்குலைவை ஏற்படுத்தும் இதுபோன்ற திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினால் இந்த நோயாளிகளைக் குணப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக அது சமூகத்தில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும். இதுபோன்ற உளவியல் கோளாறு உள்ள நோயாளிகளைக் குணப்படுத்த ஆலோசனையே சிறந்த வழி.
தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்கள் பெற்றோர்கள் ஆகும் போது, தங்கள் குழந்தைகளைச் சரியாக வளர்க்க முடியாது என்று 67 சதவீத டாக்டர்கள் கருதுகிறார்கள்" என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேவையில்லை: தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நிலையில், அவர்கள் இந்த சர்வேவை நடத்தியுள்ளனர்.
மேலும், சுமார் 57% வல்லுநர்கள் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கத் தேவையில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக இது தொடர்பான வழக்கில் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காமல் இதுபோன்ற பிரச்சினைகளை எப்படித் தீர்க்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications