எல்லையில் அத்துமீறும் சீனா! "உக்ரைனில் ரஷ்யா என்ன செய்து பாருங்க.." கமலிடம் ராகுல் சொன்ன பகீர் தகவல்
டெல்லி: நடிகர் கமல் ஹாசன் உடன் ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய உரையாடலில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசியிருந்தார். இதில் அவர் உக்ரைன் போர் விவகாரத்தை வைத்து இந்தியா சீனா நிலைமையை விளக்கியுள்ளார்.
Recommended Video
ராகுல் காந்தி இப்போது நாடு முழுக்கு ஒற்றுமை யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை காஷ்மீரில் சென்று நிறைவடைகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுல் காந்திக்கு மிக பெரிய வரவேற்பு கிடைப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியினரைத் தாண்டி பொதுமக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்த பாத யாத்திரையில் ஆர்வமாகப் பங்கேற்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

ராகுல் காந்தி
நாட்டு மக்களை ஒன்றிணைக்க ராகுல் காந்தி இந்த பாத யாத்திரையை நடத்தி வருகிறார். மேலும், தொடர் தோல்விகளால் காங்கிரஸ் தொண்டர்கள் துவண்டு கிடக்கும் சூழலில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இந்த பாத யாத்திரை அமைந்துள்ளது. இப்போது ராகுல் காந்தி டெல்லியில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் அவரது பாத யாத்திரைக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது நினைவில் இருக்கும்.

கமல்ஹாசன்
மேலும், இந்த பாத யாத்திரையில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். திரைத் துறையினர், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இந்த பாத யாத்திரையில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டிருந்தார். அதேபோல சமீபத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்தார். இதனிடையே கமல்- ராகுல் காந்தி இடையே நடைபெற்ற ஒரு உரையாடலின் தொகுப்பைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

எல்லை விவகாரம்
அதில் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசியிருந்தனர். அதில் எல்லை விவகாரம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை மோதலுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை விளக்கினார். இது குறித்து அவர் கூறுகையில், "உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.. மேற்குலக நாடுகளுடன் உக்ரைன் நல்ல உறவை வைத்திருப்பதை ரஷ்யா விரும்பவில்லை. அதுதான் இந்தியாவிற்கும் பொருந்தும்.

சீனாவின் மெசேஜ்
நாம் என்ன செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சீனா நம்மிடம் கூறுகிறது. இல்லையென்றால் எல்லையில் இருக்கும் நிலைமை மாற்றுவோம் என்கிறார்கள். எல்லை தாண்டி லடாக்கிற்குள் நுழைவோம், அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற அணுகுமுறைக்காகச் சீனா எல்லையில் பெரிய தளங்களை உருவாக்கி வருகிறது. இது நாம் அனைவராலும் பார்க்க முடியும்.

ராணுவம்
நமது இடத்தில் சீனா உள்ளது. இதை நமது நாட்டு ராணுவம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், பிரதமர் மோடி தொடர்ச்சியாக எல்லைக்குள் யாருமே நுழையவில்லை என்று கூறி வருகிறார். இதற்கு நாம் உரியப் பதிலடியைத் தர வேண்டும். நாம் எல்லையில் யாருமே நுழையவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது சீனாவிற்குத் தவறான செய்தியை அனுப்புகிறது. அதாவது எல்லையில் நாம் என்ன என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இந்தியா பதிலளிக்காது என்பதையே இது காட்டுவதாக உள்ளது.. நாம் அமைதியாகவே இருந்தால்.. அதன் பிறகு நம்மால் பேச்சுவார்த்தையில் நமக்கு வேண்டியதைப் பெற முடியாது" என்றார்.

எல்லை விவகாரம்
எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே சிக்கல் தொடர்ந்து வருகிறது. அதிலும் 2020இல் ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை கையை மீறிச் சென்றது. இதையடுத்து இரு தரப்பு வீரர்களும் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வந்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, எல்லையில் இருந்து ராணுவம் மெல்ல வாபஸ் பெறப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த மாதம் அருணாசல் எல்லையில் மீண்டும் சீனா அத்துமீறியது பரபரப்பைக் கிளப்பியது.












Click it and Unblock the Notifications